திருவண்ணாமலையில் காத்திருந்து தொப்பி அம்மாளிடம் ஆசி வாங்கிய டிடிவி தினகரன்! யார் இந்த சாமியார்?
திருவண்ணாமலை: தொப்பி சாமியாரிடம் ஆசி வாங்குவதற்காக கோயில் வாசலிலேயே அமமுக பொதுச் செயலாளர் டிடிவ தினகரன் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பஞ்சபூத தலங்களில் நெருப்பாக திருவண்ணாமலை கருதப்படுகிரது. இது பார்ப்பதற்கு சிவலிங்கம் போல் காட்சி தரும். இந்த திருவண்ணாமலை கிரிவல பாதையை ஒரு முறை வலம் வந்தால் போதும். 108 சிவலிங்கங்களை வலம் வந்த புண்ணியம் கிடைக்கும்.

இங்கு சித்தர்கள் வழிபடுவதாகவும் சொல்லப்படுகிறது. அவர்களை தரிசிக்க மக்கள் காத்திருப்பதும் ஆச்சரியத்தை தருகிறது. ரமண மகரிஷி, யோகிராம் சுரத்குமார் உள்ளிட்டோர் வாழ்ந்துள்ளனர்.
நினைத்தாலே முக்தியை தருவது திருவண்ணாமலை. சித்தர்கள், சாமியார்களும் கிரிவலம் வருவதை பார்க்க முடியும். கண்களுக்கு புலப்படாத சித்தர்களும் இங்கு இருப்பதாக கூறப்படுகிறது. அருவமாக இருக்கும் இவர்கள் நம்மை ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் திருவண்ணாமலையில் தற்போது பக்தர்களை ஈர்த்து வருபவர் தொப்பி சாமியார்.
பெண் சித்தரான இவரை காண தமிழகம் மட்டுமில்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். இந்த தொப்பி சாமியார் தினமும் 3 முறை கிரிவலம் வருகிறார். இவர் திருவண்ணாமலையில் கடந்த 18 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இவர் இதுவரை யாரிடமும் யாசகம் கேட்கவே மாட்டார். பக்தர்கள் யாராவது உணவு பொருளாக கொடுத்தால் அவருக்கு வாங்க வேண்டும் என நினைத்தால் வாங்குவார். இல்லாவிட்டால் வாங்கவே மாட்டார். குறிப்பிட்ட சிலர் கொடுப்பதை மட்டுமே அவர் வாங்கிக் கொள்கிறார். ஆனால் எக்காரணத்தை கொண்டும் பணம் கொடுத்தால் வாங்குவதே இல்லை.
கிரிவலம் வரும் வழியில் சில கடைகளின் முன்பு தொப்பி சாமியார் நிற்பார். அங்கு அவர்கள் கொடுக்கும் உணவு, தண்ணீரை வாங்கிக் கொண்டால் அவர்களுடைய வியாபாரம் நன்றாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தொப்பி அம்மா வாயை திறந்து பேசவே மாட்டார். ஆயினும் அவருடைய காலில் விழுந்து ஆசி வாங்குவதற்காக ஏராளமானோர் காத்திருக்கிறார்கள்.
அவரை தரிசனம் செய்தாலே வாழ்க்கையே மாறிவிடும் என பக்தர்கள் உணர்ச்சி பொங்க சொல்கிறார்கள். இந்த தொப்பி அம்மாவின் இயற்பெயர் பழனியம்மாள். இவர் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த ஜெகசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர். இவர் 18 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் வசித்து வந்தார்.
இவருடைய சகோதரர் மரணம் அடைந்துவிட்டதால் மனம் உடைந்த பழனியம்மாள் திருவண்ணாமலை கிரிவல பாதைக்கு வந்தார். இதுவரை இவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்த நிலையில் சமூகவலைதளங்களில் வைரலானதால் அவரை அடையாளம் தெரிந்து கொண்டதாக பழனியம்மாளின் மகள் தெரிவித்திருந்தார்.
தொப்பி அணிந்த படியே இருப்பதால் இவர் தொப்பி சாமியார் என அழைக்கப்படுகிறார். இவரை காண ஏராளமான பக்தர்கள் காத்திருக்கிறார்கள். அந்த வகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மற்றும் வாராகி அம்மன் கோயில்களுக்கு அமமுக பொதுச் செயலாளர் தினகரன் சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார்.
அப்போது அங்கு ஒரு கோயிலுக்கு தொப்பி அம்மாள் வருவதை அறிந்து அங்கேயே காத்திருந்தார். பின்னர் தொப்பி அம்மாள் வந்ததும் அவரை தினகரன் வணங்கினார். இதையடுத்து தொப்பி அம்மாள் அந்த கோயிலை வலம் வந்தார். கடந்த 2018ஆம் ஆண்டு கூட திருவண்ணாமலையில் மூக்குப் பொடி சாமியாரிடம் டிடிவி தினகரன் ஆசி பெற்றார்.
இந்த மூக்குபொடி சாமியாரிடம் திட்டு வாங்கினாலும் ஆசி வாங்கினாலும் நல்லது என பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். திருவண்ணாமலைக்கு வரும்போதெல்லாம் டிடிவி தினகரன் இந்த மூக்குபொடி சித்தரை சந்தித்து ஆசி பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications