திருவண்ணாமலை கோவிலில் நடக்க போகும் இரண்டு சூப்பர் விஷயம்.. அமைச்சர் சேகர்பாபு பேட்டி
திருவண்ணாமலை: சர்வதேச அளவில் புகழ் பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மாவட்ட, மாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பவுர்ணமி நாட்களிலும் அதிகளவில் வருகிறார்கள். குறிப்பாக ஆந்திராவைச் சேர்ந்த பலர் வந்தவண்ணம் உள்ளனர்.இந்நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 'பிரேக்' தரிசன முறை விரைவில் அமல்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
திருவண்ணாமலை என்பது இந்தியாவின் புகழ் பெற்ற சிவன் கோவில் ஆகும். இந்தியாவில் உள்ள பஞ்ச பூத ஸ்தலங்களில் இது அக்னி ஸ்தலமாக கருதப்படுகிறது.இந்த கோவிலின் கருவறைக்கு பின்னால் உள்ள அண்ணாமலை மலை, சிவபெருமானின் ஜோதி வடிவமாகக் கருதப்படுகிறது.

கார்த்திகை தீபம்
ஒவ்வொரு கார்த்திகை மாதத்திலும் இங்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இந்தவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதுதவிர ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து செல்கிறார்கள். சாதாரண நாட்களிலும் தற்போது ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். திருவண்ணாமலை கோயிலை பொறுத்தவரை சைவ சமயத்தின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
திருப்பதி போல் திருவண்ணாமலை
திருவண்ணாமலை கோவில், திருப்பதியை போல் தற்போது அதிக பக்தர்களால் விருப்பப்படும் கோயிலாக மாறி வருகிறது. இதையடுத்து அங்கு கூட்டம் அதிகமாக இருப்பதால், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தார்கள்.
சேகர்பாபு பேட்டி
அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. தொடர்ந்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், "திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மாவட்ட, மாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவிழா காலங்களை தவிர பவுர்ணமி நாட்களிலும் அதிகளவு வருகை தருகிறார்கள்.
அடிப்படை வசதிகள்
அதே நேரத்தில் கோவில் வளாகத்தை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிடம், உணவு மற்றும் கிரிவலப் பாதை பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அறக்கட்டளைகள், உபயதாரர்கள் மூலம் கோடிக்கணக்கான ரூபாயில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
'பிரேக்' தரிசன முறை
திருவண்ணாமலை கோவிலில் 'பிரேக்' தரிசன முறையை விரைவில் நடைமுறைப்படுத்த ஆலோசித்து வருகிறோம். அதற்காக கோவில் சிவாச்சாரியார்களுடன் இணைந்து தரிசன நேரத்தை நீட்டிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அருணாசலேஸ்வரர் கோவிலில் கூடுகின்ற கூட்டத்திற்கு ஏற்றவாறு தரிசன நேரத்தை நீட்டிப்பு செய்வது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். மேலும் தற்போது உள்ள 50 ரூபாய் தரிசன கட்டணத்தை 100 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
செல்போனுக்கு தடை
அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் சுமார் 20 ஆண்டு காலம் பயன்படும் வகையில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெரும் திட்ட வரைவு ரெடியாகி வருகிறது. அந்தப்பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. அதேபோல் அருணாசலேஸ்வரர் கோவிலில் செல்போன் கொண்டு செல்வதை தடை செய்வது குறித்து விரைவில் ஆலோசனை செய்து 10 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும்" இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.












Click it and Unblock the Notifications