விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி.. வீட்டில் நடந்த தரமான சம்பவம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததாக விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி மற்றும் அவரது குடும்பத்தினரை வீட்டுக்குள் வைத்து பூட்டிய பொதுமக்கள் சிறை வைத்துள்ளனர். ஏழு பூட்டுகள் போட்டு சிறைவைக்கப்பட்டவர்களை போலீசார் வந்து அத்தனை பூட்டுகளையும் உடைத்து மீட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த 40 வயதாகும் விஜய் முருகன் , நடிகர் விஜய் ரசிகர் மன்ற ஆரணி நகர தலைவராக இருந்து வந்துள்ளார். இவர் தற்போது தமிழக வெற்றிக்கழக கட்சியின் ஆரணி தொகுதி தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

விஜய்யின் தீவிர ரசிகரான விஜய் முருகன் அந்தப்பகுதியில் உள்ள பெண்களிடமும், சிறு வியாபாரிகளிடமும் மாத சீட்டு, வார சீட்டு, தினச்சீட்டு என கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சீட்டுகள் நடத்தி வந்திருக்கிறார். அப்படி சீட்டு கட்டி முடித்தவர்களுக்கு பணம் தராமல் ஏமாற்றி வந்தாராம்.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், ஆவேசத்துடன விஜய் முருகன் வீட்டு முன்பு நேற்று குவிந்தனர். அத்துடன் அவரது வீட்டின் கேட்டிற்கு 7 பூட்டுகள் போட்டு பூட்டி உள்ளார்கள். சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த விஜய் முருகன், என்னை உள்ளே வைத்து பூட்டு போட்டது யார் என கேட்டு கூச்சலிட்டுள்ளார்.
இந்த தகவல் குறித்து அறிந்த ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்கள். அங்கு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், விஜய்முருகன் வீட்டின் கேட்டில் பூட்டப்பட்டு இருந்த 7 பூட்டுகளையும் உடைத்து, வீட்டிற்குள் இருந்த விஜய் முருகன், அவரது தாய் மற்றும் 2 குழந்தைகள் என 4 பேரை மீட்டனர். பின்னர் சீட்டுப்பணம் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் பேசிய போலீசார், ஆரணி நகர போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல்துறையிடம் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். சீட்டு பணம் கட்டி முடித்து பல மாதங்கள் ஆகியும் எங்களுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் த விஜய் முருகன் புதியதாக சொத்து வாங்கி இருக்கிறார். இதனால் தான் அவரது வீட்டுக்கு பூட்டு போட்டோம். மேலும், கடந்த 2022-ம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் இந்த முடிவுக்கு வந்தோம் என்றார்கள்.
அப்போது போலீசார், கோடிக்கணக்கில் பணம் மோசடி நடந்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுவதால், திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் தான் புகார் செய்ய வேண்டும் என்றும், வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்திற்கு சென்று இதுபற்றி மேல்முறையீடு செய்யுங்கள் என்று பொதுமக்களிடம் போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications