ஹைட்ரோ கார்பன் திட்டம் .. மன்னார்குடியில் 13 கிராம மக்கள் குளத்தில் இறங்கி போராட்டம்
மன்னார்குடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மன்னார்குடி சுற்று வட்டாரத்தில் 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் விழுப்புரம், நாகை, கடலூர், திருவாரூர், மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு வேதாந்தா குழுமத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதைத்தொடர்ந்து 274 இடங்களில் 3500 அடி முதல் 6 ஆயிரம் அடி வரை கிணறுகள் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் முதல் புதுச்சேரி வரை 1,794 சதுர கிலோ மீட்டர் பரப்பில் 274 கிணறுகள் தோண்டப்பட உள்ளது.

158 கிணறுகள்
தமிழகத்தில் வேதாந்தா நிறுவனம் முதல் வட்டாரத்திற்கு மரக்காணம் முதல் கடலூர் வரை ஹைட்ரோ கார்பன் எடுக்க பரிசோதனை செய்ய உள்ளது. கடந்த 12-ந்தேதி இரண்டாவது வட்டாரத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்த 2-வது வட்டாரம் என்பது நாகை மாவட்டத்தின் ஆழ்கடல் இல்லாத கரையோர கடல் பகுதியாகும். இந்த பகுதியில் 158 கிணறுகள் அமைக்கப்பட உள்ளது.

ஆர்ப்பாட்டம்
இந்த திட்டங்களை செயல்படுத்தினால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டு விடும். எனவே இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாய சங்கத்தினர், பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம்
இந்த நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மன்னார்குடி சுற்றுவட்டாரத்தில் 13 கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கீரப்பாளையம், நெம்மேலி, சேராங்குளம், கோட்டூர், நீடாமங்கலம் உள்ளிட்ட 16 கிராமங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திரும்ப பெற கோரிக்கை
கீரப்பாளையம் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்டோர் குளத்தில் இறங்கி மண் சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications