மன்னார்குடி கோயில் குளத்தில் குதித்து சென்னையைச் சேர்ந்த சினிமா உதவி இயக்குனர் தற்கொலை!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கோயில் குளத்தில் குதித்து சென்னையை சேர்ந்த சினிமா உதவி இயக்குனர் சத்யன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவர் விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றிவர் என்றும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, பாரதிதாசன் நகரில் வசிப்பவர் தங்க ரத்தினம் (51). இவர் உள்ளிக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண்காணிப்பாளர் ஆவர். இவரது கணவர் குணசேகரன் இறந்து விட்டார். இவரது மகன் சத்யன், 31 வயது ஆகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை.

உதவி இயக்குனர்
டான்ஸ் மாஸ்டரான சத்யன், சென்னைக்கு சென்று திரைப்பட உதவி இயக்குனராக வேலை செய்து வந்தார். விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக வேலை செய்துள்ளார். மேலும் இவர் பல குறும்படங்களும் எடுத்துள்ளார்.

தாய்க்கு பாதிப்பு
இந்நிலையில், சத்யனின் தாயார் தங்க ரத்தினம் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதனால் சென்னையில் இருந்து மன்னார்குடி வந்த சத்யன் கடந்த 2 ஆண்டுகளாக மன்னார்குடியில் தங்கி தாயை கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்ற சத்யன், இரவு 9மணியாகியும் வீடு திரும்ப வில்லை.

உடல் மிதந்தது
அவரது தாய் தங்க ரத்தினம் , சத்யனின் செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிச் ஆப் ஆகி இருந்தது தெரியவந்தது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் அங்கும் அவர் இல்லை. இந்நிலையில் நேற்று காலை ராஜகோபால சுவாமி கோயில் தெப்பக்குளத்தில் சத்யன் சடலமாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணை
தகவல் அறிந்து நேரில் வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய மன்னார்குடி டவுன் போலீசார் , பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் தற்கொலைக்கான காரணத்தை விசாரித்தனர். விசாரணையில் பல திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்ற வாய்ப்புகள் வந்தும், தாயை கவனிக்க வேண்டியது இருந்ததால் சத்யனால் சென்னைக்கு செல்ல முடியவில்லை.

சோகம்
இதனால் மன அழுத்தத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். உதவி இயக்குனர் கோயில் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மன்னார்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications