College Students: அவளுக்கும் ஊத்திக் கொடு.. திருவாரூர் அரசு கல்லூரியில் மது அருந்திய மாணவிகள்.. பெற்றோர்கள் ஷாக்
திருவாரூர்: நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவிகள் மது குடித்த வீடியோ வெளியாகி பெற்றோரை அதிர வைத்த நிலையில், அந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பே தற்போது திருவாரூரில் அரசு கல்லூரி மாணவிகள் பீர் குடிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் அருகே உள்ள கிடாரம் கொண்டான் பகுதியில் தியாகராஜ கோயில் வளாகத்தில் அரசு கலைக்கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் 2,500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

கிளாஸ் ரூமில் மது அருந்தும் கல்லூரி மாணவிகள்
இந்தக் கல்லூரியில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்கும் மாணவிகள் நடன ஒத்திகையில் ஈடுபட்டு இருந்து இருக்கிறார்கள். அப்போது அங்கிருந்த ஐந்திற்கும் மேற்பட்ட மாணவிகளில் சிலர் மது அருந்தி இருக்கிறார்கள். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப்பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த வீடியோவில் மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்து இருக்கிறார்கள். கையில் பாட்டில் ஒன்றை வைத்துக்கொண்டு ஒருவர் மாற்றி ஒருவர் மது அருந்திக்கொண்டு இருக்கிறார்கள். "அவுங்களுக்கும் கொடுங்க" என்று மாணவிகள் பேசிக்கொள்ளும் காட்சிகளும் பீர் பாட்டிலை மாற்றி மாற்றி எடுத்துக்கொள்ளும் காட்சிகளும் அதிர வைப்பதாக உள்ளன.
அதிர்ச்சியடைந்த பெற்றோர்
இது மட்டும் இன்றி குடித்துவிட்டு மயங்கிவிடக்கூடாது.. ஒழுங்காக ஆட வேண்டும். என்றும் ஒரு மாணவி அட்வைஸ் சொல்லிக்கொண்டே பீர் பாட்டிலை கைமாற்றிவிடுகிறார். இந்தக் காட்சிகளை பார்த்து ரத்தக்கண்ணீர் வடிக்காத குறையாய் பெற்றோர்கள் பதறிப்போயுள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
சுமார் 1 நிமிடம் ஓடகூடிய இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் எந்த ஒரு விளக்கமும் கூறப்படவில்லை. மாணவிகளுக்கு உரிய முறையில் அட்வைஸ் செய்து சமுதாய சீர்கேடை தரும் இத்தகைய செயல்களில் இனிமேலும் படிக்கும் காலத்தில் எந்த ஒரு மாணவ - மாணவியரும் ஈடுபடக்கூடாது என்பதை உறுதி செய்ய ஆசிரியர்களும் பெற்றோர்களும் உரிய கண்காணிப்பு மற்றும் அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள்.
நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் சீருடையிலேயே அமர்ந்து மாணவிகள் மது குடித்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் நடத்திய விசாரணையில், 6 மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெற்றோர்களை அதிரவை வைத்த நிலையில், இதன் தாக்கமே இன்னும் நீங்காத நிலையில் அதற்குள் திருவாரூரில் கல்லூரி மாணவிகள் மது குடித்த காட்சிகள் வெளியாகியிருப்பது சமூகம் எதை நோக்கி செல்கிறது என்ற கேள்வியை எழுப்புவதாக அமைந்துள்ளது.
திரைப்படங்களிலும் சர்வ சாதாரணமாக மது குடிக்கும் காட்சிகளை காட்சிப்படுத்தும் இயக்குநர்களும் அதில் நடிக்கும் நடிகர்களும் கொஞ்சம் சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள்.
உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும்
குடிப்பது குடிப்பழக்கத்திற்கு ஆளாவது என்பதற்கு வெறும் சினிமாவை மட்டும் பொத்தாம் பொதுவாக கைகாட்டிவிட்டு செல்ல முடியாது என்றும் இதில் பெற்றோர்களின் பங்கும் முக்கியமானது என்றும் சமூக ஆர்வல்ரகள் அறிவுறுத்துகிறார்கள்.
அதாவது வீட்டில் உள்ள ஆண்கள் குடித்துவிட்டு வருவது, வீட்டில் வாங்கி வைத்து குடிப்பது போன்ற செயல்களை சிறுவயதில் இருந்தே பார்த்து வரும் குழந்தைகள் இதுபோன்ற தவறான பழக்கங்களுக்கு உந்தப்படுகிறார்கள் எனவும், வீட்டில் உள்ளவர்களும் பொறுப்புடன் நடந்து கொள்வதோடு, மாணவ மாணவிகளுக்கும் இது தொடர்பாக உளவியல் ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications