முதலமைச்சரை சந்திக்காமல் இங்கிருந்து நகரமாட்டேன்... 2 மணி நேரம் போராடி மனு அளித்த திமுக எம்.எல்.ஏ.
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
முதலமைச்சரை சந்திக்காமல் தாம் செல்லப்போவதில்லை என டி.ஆர்.பி. ராஜா பிடிவாதம் பிடித்ததால் வேறுவழியின்றி அவரை சந்தித்து அவர் அளித்த கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார் முதல்வர்.
மன்னார்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க வேண்டும், மெகா 'புட் பார்க்' அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 கோரிக்கைகளை முன்வைத்தார் ராஜா.

மாவட்டந்தோறும்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்வதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறார். அந்தவகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வுக்கூட்டம் நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்த மன்னார்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

காத்திருப்பு போராட்டம்
முதலமைச்சர் நடத்தும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுத்தாலும் பரவாயில்லை அவரை சந்தித்து தாம் கொண்டு வந்துள்ள கோரிக்கை மனுவையாவது கொடுக்க அனுமதிக்குமாறு ராஜா கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கும் அங்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் முதல்வரை சந்திக்காமல் செல்லமுடியாது எனக் கூறி இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருப்பு போராட்டம் நடத்தினார்.

அழைத்துப் பேசி
அதற்குள் இந்த தகவல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காதுக்கு எட்ட, ஆய்வுக்கூட்டத்தை முடித்து வந்த அவர் திமுக எம்.எல்.ஏ. ராஜா அளித்த மனுவை பெற்றுக்கொண்டார். அந்த மனுவில் மன்னார்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க வேண்டும், மன்னார்குடியில் நவீன முறையில் புதிய பேருந்துநிலையம் கட்டப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.

சிறிது நேரம்
திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா முதல்வரை சந்திக்க வந்த விவகாரத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கடந்தவாரம் தருமபுரியில் திமுக எம்.பி.செந்தில்குமார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது போல் ராஜாவும் போராட்டத்தில் ஈடுபட்டால் என்ன செய்வது என காவல்துறையினர் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டனர். ஆனால் அதற்குள் அங்கு எல்லாம் நல்ல விதமாக நடைபெற்று முடிந்தது.












Click it and Unblock the Notifications