மும்மொழி சர்ச்சை.. அமலாக்கத்துறை ரெய்டு மூலம் திசைதிருப்ப முயற்சி.. உதயநிதி ஸ்டாலின் ஒரே போடு!
திருவாரூர்: மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்ப்பதால் மத்திய அரசு அமலாக்கத்துறை மூலமாக ரெய்டு நடத்துவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை சோதனை முடிந்த பின் அவர்களே காரணத்தை கூறுவார்கள் என்ற உதயநிதி ஸ்டாலின், பாஜகவினரின் கையெழுத்து இயக்கம் என்பது மிஸ்டுகால் கொடுத்து ஒரு கோடி பேரை கட்சியில் சேர்த்ததன் தொடர்ச்சியே என்றும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை குறி வைத்து அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருவதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டில் 15 மாதங்கள் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறையில் இருந்து வெளியில் வந்தார். அவர் வெளியில் வந்த 2 நாட்களிலேயே மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.

இதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில் நேற்று செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான கொங்கு மெஸ் மணி, சக்தி மெஸ் சக்திவேல், ஒப்பந்தத்தாரர் எம்சிஎஸ் சங்கர் ஆகியோர் தொடர்புடைய வீடுகள், அலுவலகங்கள் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
அதேபோல் செந்தில் பாலாஜி வசம் உள்ள மதுவிலக்குத் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் அமலாக்கத்துறை ரெய்டு நடைபெற்றது. அமலாக்கத்துறையின் ரெய்டு 2வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதனை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம், அமலாக்கத்துறை ரெய்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்பதால் தங்களின் ஏஜெண்ட் மூலமாக மத்திய அரசு சோதனையை நடத்துகிறது.
மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு, நிதி பகிர்வு விவகாரத்தை திசைதிருப்பவே மத்திய அரசு ரெய்டு நடத்துகிறது. அமலாக்கத்துறையின் சோதனை முடிந்தால், அவர்களே காரணத்தை கூறுவார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து பாஜக சார்பாக நடத்தப்பட்டு வரும் கையெழுத்து இயக்கம் தொடர்பான கேள்விக்கு, பள்ளிக் குழந்தைகளிடம் கையெழுத்து வாங்கக் கூடாது.
நாங்கள் நீட் தேர்வுக்கு எதிராக கிட்டத்தட்ட ஒரு கோடி கையெழுத்து வாங்கினோம். அப்போது பள்ளி மாணவர்களை தவிர்த்துவிட்டுதான் கையெழுத்தை பெற்றோம். ஏற்கனவே மிஸ்டு கால் கொடுத்து ஒரு கோடி பேரை அந்த கட்சியில் சேர்த்தார்கள். அதன் தொடர்ச்சியாகவே இப்போது கையெழுத்து பெறுவதையும் பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications