மக்களவை தேர்தலிலும் அதிமுக படுதோல்வி அடையும்.. பட்டென பேசிய ஓபிஎஸ்.. திகைத்த கூட்டம்!
திருவாரூர்: மக்களவைத் தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக படுதோல்வி அடையும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2022 ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், ஓபிஎஸ் தரப்பினரை நீக்கி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. தொடர்ந்து, தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரித்தது.

மேலும், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஓபிஎஸ் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டார். ஓபிஎஸ் மேல்முறையீடு செய்ய, இரு நீதிபதிகள் அமர்வும் முந்தைய தீர்ப்பை உறுதி செய்தது.
இந்நிலையில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு என்ற பெயரில், தனது ஆதரவாளர்களைச் சந்தித்து வருகிறார் ஓபிஎஸ். மாவட்ட வாரியாகச் சென்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாஜகவுடன் இணைந்து போட்டியிட ஏதுவாக, தனது ஆதரவாளர்களைத் திரட்டி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.

அந்தவகையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், எம்எல்ஏ மனோஜ் பாண்டின், கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "அதிமுகவை எம்ஜிஆர் உருவாக்கிய போது, பொதுச் செயலாளர் பதவியை தொண்டர்கள் தான் நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த ஷரத்தை எக்காரணம் கொண்டும் மாற்றக் கூடாது என கூறியிருந்தார். ஆனால் பழனிசாமி இதனை மாற்றி அமைத்துள்ளார். அதன்படி பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட 10 மாவட்ட செயலாளர்கள் பரிந்துரை செய்ய வேண்டும் என்ற விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த விதிப்படி, பொதுச் செயலாளர் பதவிக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றால் சாதாரண தொண்டன் போட்டியிட முடியுமா என்பதை தொண்டர்கள் யோசிக்க வேண்டும். எம்ஜிஆர் கொண்டு வந்த விதியையே மாற்றிவிட்டனர். தனக்குப் பதவி கொடுத்தவர்களுக்கே துரோகம் செய்தவர் பழனிசாமி. தற்போது தொண்டர்களுக்கும் துரோகம் செய்ய உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. அந்த வகையில் வருகின்ற மக்களவைத் தேர்தலிலும் பழனிசாமி தலைமையிலான அதிமுக படுதோல்வி அடையும். எனவே, தொண்டர்கள், அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்க ஓரணியில் திரள வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார் ஓபிஎஸ்.












Click it and Unblock the Notifications