”துரோகிகள்” அட்ரஸ் இல்லாம போயிட்டாங்க.. அதிமுக பிளவுக்கு காரணம் சொன்ன காமராஜ்! அதுவும் சசிகலா ஊரில்
திருவாரூர்: அதிமுகவிற்கு துரோகம் செய்த தலைவர்களில் ஒருவரும் முகவரி இல்லாமல் போய்விட்டனர் என மன்னார்குடியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியுள்ளார்.
Recommended Video
ஒற்றைத் தலைமை தீர்மானம் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் தொடர் எதிர்ப்புகள், வழக்குகளை கடந்து ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூடியது. ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தை ஓ.பன்னீர்செல்வம் கைப்பற்ற, மறுபக்கம் பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் உள்ளிட்டோர் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
இந்த சூழலில் கடந்த ஜூலை 8 ஆம் தேதி காமராஜுக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ. 41.06 லட்சம் பணம், 963 சவரன் நகை சிக்கின. இருப்பினும் கட்சிப்பணிகளில் தொடர்ந்து செயல்பட்டு வரும் காமராஜ், அண்மையில் பேட்டியளித்தபோது 3 மாதங்களில் எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளர் ஆவார் என்று கூறினார்.

மன்னார்குடியில் கூட்டம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் உணவுத்துறை அமைச்சருமான காமராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த கூட்டத்தில் பலர் கலந்துகொண்டனர்.

முகவரி இழந்த தலைவர்கள்
நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ், "அதிமுக என்பது மிகப்பெரிய மக்கள் இயக்கம். பல்வேறு சோதனைகளை கடந்து வரும்போது, அவ்வப்போது தலைவர்கள் செய்கின்ற பல்வேறு பிரச்சனைகளையும் தாண்டிதான் இந்த இயக்கம் வந்திருக்கிறது. அதிமுக இயக்கத்திற்கு துரோகம் விளைவித்த தலைவர்கள் ஒருவர்கூட முகவரி இல்லாமல் போய்விட்டனர்.

ஒற்றைத் தலைமை
ஒற்றை தலைமை என்று சொல்லும்போது யாருக்கு பெரும்பான்மை இருக்கிறதோ அவர்தான் ஒற்றைத் தலைமையாக வர வேண்டும். பொதுச்செயலாளராக வரவேண்டும் என்பதுதான் ஜனநாயகம். அந்த ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனவேதான் ஒரே பக்கமாக எல்லோரும் நின்று கொண்டிருக்கிறோம்." என்றார்.












Click it and Unblock the Notifications