நிச்சயதார்த்த வீட்டில் 38 சவரன் நகை மாயம்.. விசாரிச்சு பார்த்தா செம டுவிஸ்ட்! யாரைதான் நம்புவது?
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முகமது ஆரிப். இவரது மகள் ஜனுல் ஆத்திகாவிற்கு, கடந்த 18-ம் தேதி, அவரது வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில், மணப்பெண்ணின் தோழிகள் மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மணப்பெண்ணின் தோழி
நிச்சயதார்த்த நிகழ்ச்சி முடிந்த பின்னர், அன்றைய தினம் மாலை ஜனுல் ஆத்திகா, வீட்டின் மேல்தளத்தில் உள்ள தனது அறைக்கு, தோழி வினிதாவுடன் சென்று, தான் அணிந்திருந்த செயின், வளையல், மோதிரம் உள்ளிட்ட சுமார் 15 லட்சம் மதிப்பிலான 38 சவரன் தங்க நகைகளை பீரோவில் வைத்துள்ளார். பின்னர் நிச்சயதார்த்த பெண் மாடியில் இருந்து கீழே இறங்கி, தனது உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அவரது தோழி வினிதா மட்டும் மாடியில் உள்ள அறையில் இருந்துள்ளார்.

மாயமான நகைகள்
பின்னர் தோழி வினிதா தனது ஊருக்குச் செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார். பின்னர், நிச்சயதார்த்த பெண் ஜனுல் ஆத்திகா, பீரோவை திறந்து பார்த்தபோது நகைகள் அனைத்தும் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்த 38 சவரன் தங்க நகைகள் மாயமானது குறித்து, உடனடியாக தனது தந்தை முகமது ஆரிப்பிடம் அவரது மகள் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு, மணப்பெண்ணின் அறையில் தங்கியிருந்த தோழி வினிதா மீது ஆரிப் குடும்பத்தாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

காவல் நிலையத்தில் புகார்
இதனைத் தொடர்ந்து முகமது ஆரிப், முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த முத்துப்பேட்டை போலீசார், நிச்சயதார்த்த பெண்ணின் தோழியான திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த வினிதா என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், தோழியின் நகையை திருடியதை வினிதா ஒப்புக்கொண்டார். மேலும், அவர் எம்.சி.ஏ படித்து வந்ததும் தெரியவந்தது.

நகையை திருடிய தோழி
பட்டதாரியான வினிதா, திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட முத்துப்பேட்டை மணப்பெண்ணுடன் மன்னார்குடி தனியார் கல்லூரியில் படித்துள்ளார். பின்னர் வினிதா, படிப்பு முடிந்து சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். தோழியிடம் இருந்து திருமணம் நிச்சயதார்த்தம் அழைப்பு வந்ததும் சென்னையில் இருந்து முத்துப்பேட்டைக்கு வந்துள்ளார். நிச்சயதார்த்த பெண் வீட்டின் மாடியில் தங்கியிருந்த வினிதா, தனது தோழி ஜனுல் ஆத்திகாவின் தங்க நகைகளை நோட்டமிட்டு, பின்னர் அறையில் யாரும் இல்லாதபோது பீரோவில் இருந்து நகைகளை திருடி வைத்துக் கொண்டு, ஒன்றும் தெரியாதுபோல் சென்னைக்கு புறப்பட்டு வந்தது விசாரணையில் அம்பலமானது.

நகைகள் விற்பனை + கைது
சென்னைக்கு வந்த வினிதா, திருடிய நகைகளில் பாதியை, அங்குள்ள நகை கடை ஒன்றில் விற்றுவிட்டு, அதற்குப் பதிலாக வேறு நகைகளை வாங்கியுள்ளார். பின்னர் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு வந்து மற்ற நகைகளை விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து, நகையை திருடிய வினிதாவை கைது செய்த போலீசார், காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் விற்பனை செய்யப்பட்ட நகைகளை பறிமுதல் செய்த போலீசார், தோழியின் நகையை திருடிய வினிதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications