உழைப்புக்கு மரியாதை இல்லை! 205 திமுக கிளைச் செயலாளர்கள் ராஜினாமா முடிவு! பரபரக்கும் திருவாரூர்!
திருவாரூர்: ஒன்றியச் செயலாளர் நியமனத்தில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வடக்கு ஒன்றியத்தில் 205 திமுக கிளைக் கழகச் செயலாளர்கள் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்கள்.
அண்ணாதுரை என்பவருக்கு பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு இருந்தும் அவரை ஒன்றியச் செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கவில்லை என்பது அவர்களின் புகாராகும்.
கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் நாளை தங்களது ராஜினாமா கடிதங்களை திமுக கிளைக் கழகச் செயலாளர்கள் வைக்க திட்டமிட்டுள்ளனர்.

ஒன்றியச் செயலாளர்
தமிழகம் முழுவதும் ஒன்றியச் செயலாளர் பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் நேற்று திமுக தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியல் வெளியானது முதல் பல இடங்களிலும் பஞ்சாயத்துக்கள் வெடித்துள்ளன. இதில் உச்சபட்சமாக கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூரில் 205 கிளைக் கழக செயலாளர்கள் ராஜினாமா முடிவை எடுத்திருக்கிறார்கள். காரணம்நீடாமங்கலம் வடக்கு ஒன்றியச் செயலாளர் பதவிக்கு அண்ணாதுரை என்பவரை தேர்வு செய்யவில்லை என்பதாகும்.

205 கிளைச் செயலாளர்கள்
மாற்றுக்கட்சிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோரை திமுக அழைத்து வந்தவர், திமுக எதிர்க்கட்சியாக இருந்தக் காலங்களில் கட்சிக்காக உழைத்தவர் என அவரது ஆதரவாளர்கள் புகழ் புராணம் பாடுகிறார்கள். அண்ணாதுரைக்கு ஒன்றியச் செயலாளர் பதவி கொடுக்கப்படாததை கண்டித்து 205 கிளை கழக செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள், 3 ஒன்றிய கவுன்சிலர்கள், 6 ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதென தீர்மானித்துள்ளார்கள்.

அஞ்சுகம் அம்மையார்
நாளை காலை 10 மணி அளவில் திருவாரூர் அருகே உள்ள காட்டூருக்கு சென்று அங்குள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் ராஜினாமா கடிதங்களை வைக்க இருக்கிறார்கள். பதவிகளை ராஜினாமா செய்தாலும் கூட சாதாரண அடிப்படை உறுப்பினராக திமுகவிலேயே தொடர்வது என முடிவெடுத்திருக்கிறார்கள். இது தொடர்பாக தகவலை கல்யாண மோகன் என்பவர் தனது முகநூல் பக்கத்திலேயே பதிவு வெளியிட்டுள்ளார்.

பதவி பஞ்சாயத்து
நீடாமங்கலம் வடக்கு ஒன்றியத்தில் தான் இப்படி பிரச்சனை என்றால் மேற்கு ஒன்றியத்திலும் இதேபோல் சலசலப்புகள் எழத் தொடங்கியுள்ளன. கருணாநிதியின் சொந்த மாவட்டத்திலேயே இது போன்ற பஞ்சாயத்துகள் வெடித்திருப்பதால் அதனை சரிசெய்யும் வேலையில் திமுக தலைமை ஈடுபட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்னும் பல இடங்களில் பதவி பஞ்சாயத்துக்கள் அறிவாலயத்திற்கு வந்த வண்ணம் உள்ளன.












Click it and Unblock the Notifications