ஜனவரி 28 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பால் திருவாரூர் மாணவர்கள் குஷி!
திருவாரூர்: வரும் ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் ஆகிய 3 தாலுகாக்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பிப்ரவரி 7 ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு முடிந்து, தற்போது முழு ஆண்டு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். தற்போது தான் மாணவர்களுக்கு பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. முழு ஆண்டு தேர்வுக்காக பாடத்தை முடிக்க ஆசிரியர்கள் தீவிரமாக உள்ளனர். இந்த நிலையில், மாணவர்களுக்கு விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, திருவாரூர் மாவட்டத்தில் உள்ளள மூன்று வட்டங்களுக்கு வரும் ஜனவரி 28 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோயில் திருவிழா உள்ளிட்ட முக்கிய நாட்களில் குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிப்பது வழக்கம்.
அந்த வகையில், ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார்குடி, நீடாமங்கலம், கொட்டூர் ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் ஜனவரி 28 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார்குடியில் உள்ள ஸ்ரீராஜகோபாலசுவாமி கோயிலில் வரும் 28 ஆம் தேதி மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த இந்தக் கோயில் கோயில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கி.பி.1072-கி.பி. 1122 கட்டப்பெற்ற வைணவத் திருக்கோயில். ஸ்ரீ மணவாள மாமுனிகளால் அபிமானிக்கப்பட்ட ஸ்தலம். இக்கோயில், குலோத்துங்க சோழ விண்ணகரம் என்று அழைக்கப்பட்டு வருகிறது
ஆயிரம் ஆண்டு பழமையான இக்கோயிலில் வருகிற 28 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு, இந்த கும்பாபிஷேக விழாவில் உள்ளூர் மக்கள் கலந்து கொள்ளும் வகையில், மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் ஜனவரி 28 ஆம் தேதி புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடுமுறை ஈடு செய்யும் வகையில், பிப்ரவரி 7 ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறை என்பது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். தனியார் பள்ளிகளின் நிர்வாகம் எடுக்கும் முடிவின்படி, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு நாளை ஜனவரி 26ஆம் தேதி திங்கட்கிழமை குடியரசு தினத்தன்று விடுமுறை. அதனை தொடர்ந்து, ஜனவரி 27 ஆம் தேதி மட்டும் பள்ளிகள் செயல்படும். மீண்டும் திருவாரூர் மாவட்டத்தின் 3 வட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications