அண்ணாமலை சொல்வது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா? கடுகடுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!
திருவாரூர்: கைக்கடிகாரம் விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சொல்வது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சாடியுள்ளார்.
ஆளுநர் ரவியை பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னணி ஊழியரை போல் செயல்பட்டு வருவதாக அவர் விமர்சித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் கீழ்வெண்மணியில் உள்ள நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்த போது கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது;

ஆளுநர் ரவி
''மோசமான பொருளாதார கொள்கைகளை கடைபிடிக்கும் மோடி அரசாங்கத்தால், தமிழகத்தில் உள்ள பஞ்சாலைகள், நூற்பாலைகள் நாசமாகி விட்டன. மாநில உரிமை பறிப்பு, மொழி உரிமை பறிப்பு என அடுக்கடுக்கான தாக்குதல்கள் மத்திய அரசால் தமிழகத்தின் மீது நடத்தப்படுகிறது. தமிழ்நாடு ஆளுநர் ரவி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முன்னணி ஊழியர் போல செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.''

கரும்பு வழங்குக
''ரவி ஆளுநராக இருக்க வேண்டும், ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளராக இருந்தால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தமிழக அரசு பொங்கல் பரிசாக 1000 ரூபாய் அறிவித்துள்ளது. கடந்த வருடம் வழங்கியது போல பொங்கல் பரிசாக செங்கரும்பை வழங்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான கரும்பு விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து இருப்பதால் தமிழக முதல்வர் பொங்கல் தொகுப்புபோடு கரும்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.''

வெட்கப்பட வேண்டும்
''டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு, சிறு குறு உற்பத்தியாளர்கள் பாதிப்பு போன்ற மத்திய அரசின் மோசமான தவறுகளை தமிழகத்தில் மறைக்கவே பாஜக தலைவர் அண்ணாமலை இது போன்ற போராட்டங்களை நடத்தி நாடகம் போடுகிறார். ரபேல் வாட்ச்சை கையில் கட்டி இருப்பதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை வெட்கப்பட வேண்டும்.''

ரபேல் வாட்ச்
''சுதேசி கொள்கைகளை பேசிக்கொண்டு 5 லட்சம் ரூபாய் வாட்ச் கட்டி இருக்கிறேன் என்று சொல்வது எவ்வளவு பெரிய கேவலம். இந்தியாவில் வேறு வாட்ச் கம்பெனி இல்லையா? உண்மையாகவே பணம் கட்டி வாட்ச்சை வாங்கி இருந்தால் ரசீதை காட்ட வேண்டும். ரபேல் கம்பெனியில் நடந்த முறைகேட்டை இதுவும் ஒரு முறைகேடு.'' இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.












Click it and Unblock the Notifications