'மோடி பிறந்தநாள் ஸ்பெஷல்'.. ஒரு லிட்டர் பெட்ரோல் 51 ரூபா தான்.. கலக்கிய தொண்டர்.. திணறிய திருவாரூர்!
திருவாரூர்: இன்று பிரதமர் மோடியின் பிறந்தநாள் என்பதால் அதை கொண்டாடும் வகையில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமானில் பெட்ரோல் பங்க் ஒன்றில் ஒரு லிட்டர் பெட்ரோல் 51 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் அந்த பக்ங்கில் வாகன ஓட்டிகள் கூட்டம் அலை மோதியது. மேலும் அங்கு வந்த வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்று மற்றும் இனிப்புகளும் வழங்கப்பட்டன.
பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 100 ஐ தாண்டி விற்பனையாகிறது. சரியாக சொல்லப்போனால் இன்றைய பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ. 102.63 ஆக உள்ளது.
தொடர்ந்து விலையேறி வந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த 4 மாதங்களாக ஒரே விலையில் நீடிப்பது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதலாக உள்ளது.
சீட்டாக்கள் இந்தியா வருகை: பிரதமர் மோடி நடத்திய தமாஷ்.. காரணங்களை அடுக்கி விமர்சித்த காங்கிரஸ்!
வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சி
இருந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை இன்னும் கணிசமாக குறைக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழகத்தை விட பாண்டிச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை குறைவு ஆக விற்பனையாகிறது. இதனால், எல்லையோர மாவட்டங்களில் இருக்கும் வாகன ஓட்டிகள், பெட்ரோல் போடுவதற்கென்றே புதுச்சேரிக்கு சென்று வருவதை பார்க்க முடியும். ஆனால், இன்று திருவாரூரில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 51 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.
அலைமோதிய கூட்டம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் உள்ள ஒரு பங்கில் இன்று காலை முதலே பெட்ரோல் லிட்டருக்கு 51 ரூபாயில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தகவல் வாகன ஓட்டிகள் மத்தியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் இரு சக்கர வாகனங்களில் வலன் வரும் பலரும் பெட்ரோல் பங்கை நோக்கி சீறிப்பாய்ந்தனர். இதனால், பெட்ரோல் பங்க் இருக்கும் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டதோடு வீட்டில் இருந்து எடுத்து வந்த கேன்களிலும் பெட்ரோலை வாங்கிச்சென்றனர்.
இனிப்பு மற்றும் மரக்கன்றுகள்
இதனால், அந்த இடமே காலை முதல் திருவிழா கூட்டம் போல காட்சியளித்தது. பெட்ரோல் நிரப்ப வரும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது. பெட்ரோல் போட்ட கையோடு இனிப்பையும் ருசிபார்த்து விட்டு வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியாய் திரும்பிச்சென்றனர். இதேபோல் வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
பிரதமர் மோடியின் ஆதரவாளர்
பெட்ரோல் விற்கும் விலைக்கு பாதி விலைக்கு விற்பதற்கான காரணம் குறித்து விசாரித்த போழுது, பெட்ரோல் பங்கின் உரிமையாளரான விஜயராகவன் என்பவர் பாஜகவின் தீவிர ஆதரவாளராம். பல ஆண்டுகளாக அக்கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருக்கும் இவர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த ஆஃபரை வாடிக்கையாளர்களுக்கு அள்ளி விட்டுள்ளார். பெட்ரோல் டீசல் விலைவாசி உயர்வையும் பொருட்படுத்தாமல் பாதி விலைக்கு பெட்ரோல் வழங்கி வரும் இந்த செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
பரவும் வீடியோ
பாதி விலைக்கு பெட்ரோல் விற்கப்பட்டதால் வலங்கைமான் பகுதியில் உள்ள அந்த பெட்ரோல் பங்கில் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவுகிறது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பலரும் அந்த பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கும் பிரதமர் மோடிக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.