நாகப்பட்டினத்தில் ஒரே நாளில் 18 செமீ மழை.. டெல்டாவில் நீரில் முழ்கிய 30 ஏக்கர் நெற்பயிர்கள்
திருவாரூர்: தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. நாகப்பட்டினத்தில் ஒரே நாளில் 18 செ.மீ. மழை கொட்டியதால், தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று தொடர் மழை பெய்த காரணத்தால் தாழ்வான பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. நாகை மாவட்டம் கோடியக்கரை, நாகை, வேளாங்கண்ணியில் அதிகபட்சமாக 18 செ.மீ. மழை பெய்திருக்கிறது.

நாகை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சிவசக்தி நகர், நாகூர் வள்ளியம்மை நகர், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட குடியிருப்புகளை மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதேபோல் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்பகுதி மற்றும் வெளிப்பிரகாரங்களில் மழைநீர் தேங்கிநின்றது. இதேபோல் மற்ற டெல்டா மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. திருவாரூர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை உள்பட டெல்டா மாவட்டத்தில் மட்டும் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி காணப்படுகிறது.
குறிப்பாக நாகை மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களும், தஞ்சை மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களும், திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. காவிரி டெல்டாவை தாண்டி அருகில் உள்ள சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திலும் நல்ல மழை பெய்தது.
இதேபோல் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, விருதுநகர் மாவட்டத்திலும் சாரல் மழை பெய்தது. தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் நேற்று பரவலாக சாரல் மழை பெய்தது. திருச்சி, அரியலூர் மற்றும் கரூரிலும் பரவலாக மழை பெய்தது. கடலூர். கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் மழை பெய்தது. நாகை மாவட்டத்தை போல்,காரைக்காலிலும் பயிர்கள் பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications