எந்த முதலீடும் இதுவரைக்கும் வரலை .. இப்போ கூட ’டூர்’ தான் போயிருக்கார்! புகார்களை அடுக்கிய அன்புமணி
திருவண்ணாமலை: நான்கு முறை வெளிநாடுகளுக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த முதலீடுகளையும் கொண்டு வரவில்லை, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 10% மட்டுமே கிடைத்துள்ளது எனவும் இப்பொழுதுகூட அவர் சுற்றுலாதான் சென்று இருக்கிறார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், திமுக ஆட்சி என்பது 'பொய்களின் முதலீடு' மட்டுமே, வேறு எந்த முதலீடுகளும் அவர் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரவில்லை எனவும் கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நடைபெற்ற உரிமை மீட்பு நடைப்பயணத்தில் பங்கேற்றார். அப்போது ஏராளமான பாமகவினர், பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்," இவர்கள் ஆண்டது போதும், உழவர்கள் மாண்டது போதும். விவசாயிகளுக்கு எதிராகக் கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆட்சி செய்வதற்கு தி.மு.க.விற்குத் தகுதி கிடையாது.

அன்புமணி ராமதாஸ்
கடந்த தேர்தலில் தி.மு.க.வை ஆட்சிக்கு அமர்த்தியது தமிழக மக்கள் செய்த மிகப்பெரிய தவறு. கடந்த மூன்று தேர்தல்களில் வெற்றிபெறச் செய்த மக்களுக்குக் கிடைத்தது ஏமாற்றமே. விவசாய நிலங்களை அழிக்காமல் சிப்காட் தொழிற்சாலைகள் அமைய வேண்டும். விவசாயிகள் நலனுக்காகப் பாமக தொடர்ந்து குரல் கொடுக்கும். விவசாய நிலங்களை அழித்து எந்தத் தொழிற்சாலையும் வரக்கூடாது. சிப்காட் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. வேலைவாய்ப்பு வேண்டும்.
ஸ்டாலின் வெளிநாட்டு பயணம்
ஆனால், விவசாய நிலத்தை அழித்து எதுவும் வேண்டாம். இந்த நிலம் ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்களுக்கு உணவு அளித்தது. நமக்குப் பிறகு பல ஆயிரம் சந்ததியினருக்கு உணவளிக்க வேண்டிய மண். நமக்கு இந்த மண்ணை அழிக்க எந்த உரிமையும் இல்லை. முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்கச் செல்லவில்லை, மாறாக சுற்றுலாதான் சென்றுள்ளார். இதுவரை நான்கு முறை வெளிநாடு சென்றுள்ள முதலமைச்சர், ரூ. 10.62 லட்சம் கோடி முதலீடு ஈர்த்ததாகப் பொய்யைக் கூறி இருக்கிறார். தி.மு.க. செய்த ஒரே முதலீடு, பொய் என்ற முதலீடு மட்டும்தான்.
வேலைவாய்ப்பு குறைவு
மேலும், 32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாக முதலமைச்சர் கூறுவதும் மிகப்பெரிய பொய். அவர் சொல்வதில் 10 சதவீதம் மட்டுமே முதலீடு வந்திருக்கிறது. விடியல் அரசு புத்தகத்தைப் போட்டது போல், முதலீடு குறித்துப் புத்தகம் தயாராகி வருகிறது. அதையும் நான் வெளிக்கொண்டு வர இருக்கிறேன். திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்படாததற்குக் காரணம் அமைச்சர் எ.வ.வேலு தான். திமுகவின் 518 வாக்குறுதிகளில் 66 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. இது 13 சதவீதம் மட்டுமே. 13 சதவீதம் மதிப்பெண் எடுத்த தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
பொய்களின் முதலீடு
வன்னியர் சமூகத்திற்காக இனி 10.5 சதவீத இட ஒதுக்கீட்டைக் கேட்காதீர்கள். இனி நீங்கள் கேட்க வேண்டியது 15 சதவீத இட ஒதுக்கீடு தான். தனக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தால், பாலாறு, தென்மடபெண்ணை ஆறு, செய்யாறு, துரிஞ்சல் ஆறு ஆகிய ஆறுகளை இணைப்பேன். மழைக்காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் நீரைத் தடுப்பேன். முதல்வர் தனக்கு ஜாதி வாரி கணக்கெடுக்கும் அதிகாரம் இல்லை என பொய் சொல்லி வருகிறார். கோழை முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். அதிகாரம் இருந்தும் பொய் சொல்கிறார்" என்றார்.












Click it and Unblock the Notifications