பல்கலை. தேர்வில் ஆள்மாறாட்டம்.. திருவாரூர் பாஜக தலைவர் கைது.. எப்படி சிக்கினார்? பின்னணி!
திருவாரூர்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாவட்ட பாஜக தலைவர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவிக அரசினர் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர படிப்புகளுக்கான பருவத்தேர்வுகள் கடந்த 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வுகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே நடைபெறும்.

பல்கலை. தேர்வு
இந்த நிலையில் பி.ஏ. பொலிட்டிக்கல் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு தேர்வு நேற்று நடைபெற்றது. அந்தத் தேர்வில் பாஸ்கர் என்ற நபர் தேர்வு எழுத வந்துள்ளார். தொடர்ந்து தேர்வு எழுதுபவர்களின் அடையாள அட்டை மற்றும் நுழைவு சீட்டு ஆகியவற்றை தேர்வு அறையில் இருந்த கண்காணிப்பாளர் பரிசோதனை செய்துள்ளார்.

தேர்வில் ஆள்மாறாட்டம்
அப்போது பாஸ்கர் என்று சொன்ன நபருக்கும், அடையாள அட்டை மற்றும் தேர்வு அறை நுழைவுச்சீட்டில் ஒட்டப்பட்டு இருந்த புகைப்படத்துக்கும் வித்தியாசம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்வு நடத்தும் அலுவலருக்கு, அந்தக் கண்காணிப்பாளர் தகவல் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், தேர்வு எழுத வந்த நபர் திருவாரூரைச் சேர்ந்த திவாகர் மாதவன் என்பதும், அவர் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கருக்காக தேர்வு எழுத வந்ததும் தெரிய வந்தது.

காவல்துறையில் புகார்
மேலும் திவாகர் 12ம் வகுப்பு முடித்துவிட்டு, பீப் கடை நடத்தி வருவதாகவும், பாஜக பிரமுகர் ஒருவர் தன்னை பாஸ்கர் என்ற நபருக்காக தேர்வு எழுத சொன்னதாகவும் தேர்வு நடத்தும் அலுவலர்களிடம் திவாகர் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தேர்வு முதன்மை கண்காணிப்பாளர் நாகரத்தினம் காவல்துறையினரிடம் புகாரளித்துள்ளார். அதன்பேரில் திருவாரூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர்.

பாஜக மாவட்டத் தலைவர் கைது
இந்த நிலையில் திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய திவாகர் மாதவன் மற்றும் அவருக்கு உதவியதாக திருவாரூர் மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு செயலர் ரமேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கரையும் போலீசார் கைது செய்தனர். ஒரு கட்சியின் மாவட்ட தலைவராக இருந்துகொண்டு பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications