உதயநிதியின் காரை திடீரென வழிமறித்த ஆசிரியர்.. அமைச்சருக்கே நீட் ரகசியத்தை சொன்ன சுவாரஸ்யம்
திருவாரூர்: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற திமுக அரசு முயற்சித்து வரும் நிலையில் நீட் ரகசியம் குறித்து அமைச்சர் உதயநிதியிடம் தனியார் பள்ளி ஆசிரியர் கூறிய கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நீட் தேர்வால் மாணவர்களின் மருத்துவ கனவு என்பது கானல் நீராகி விட்டது. நீட் தேர்வில் தோல்வி அடைந்தால் மருத்துவ படிப்பை படிக்க முடியாமல் போகும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து நீட் விலக்கு.. அதுவே நமது இலக்கு என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

நீட் எதிர்ப்பிற்கான போராட்டம் மக்கள் போராட்டமாக வெடிக்க வேண்டும் என விரும்புகிறார். இதுகுறித்து அனைத்து மேடைகளிலும் தவறாமல் பேசி வருவதை பார்க்கலாம். நீட் தேர்வு என்பது தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை கலைத்து விடும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மசோதா இயற்றி ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அனுப்பி வைத்தது. ஆனால் அவர் கையெழுத்து போடாமல் கிடப்பில் போட்டுள்ளார். ஆனால் நீட் விலக்கு மசோதாவிற்கு மத்திய அரசின் ஆலோசனை பெற்று குடியரசுத் தலைவர்தான் ஒப்புதல் தர வேண்டும்.
ஆளுநர் வெறும் போஸ்ட்மேன்தான் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிகழ்வின் போது இரு மாணவிகளுக்கு ஸ்டெதஸ்கோப் அணிவித்தார் உதயநிதி. இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் கொடுத்த ஐடியா கவனம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு உதயநிதி காரில் ஏற சென்றார்.
அப்போது திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் சரவணன் ஒருவர் வந்தார். அப்போது அவர் தன்னை உதயநிதியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் கூறுவதை உதயநிதி காரில் இருந்தபடியே கேட்டுக் கொண்டார். சரவணன் கூறுகையில் நீட், ஜேஇஇ ஆகிய தேர்வுகளை எழுதும் வகையில் சிபிஎஸ்இ பாடத்திட்டங்களை மத்திய அரசு குறைத்துவிட்டது.
நாமும் பாடத்திட்டங்களை குறைத்தால் போட்டி தேர்வுகளில் நமது மாணவர்களும் சிறப்பாக செயல்பட முடியும். உதாரணமாக சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஒரு வேதியியலில் 10 பாடங்கள்தான் உள்ளன. ஆனால் மாநில பாடப்பிரிவு, மெட்ரிக் மாணவர்களுக்கு 15 பாடங்கள் உள்ளன என்றார். இதை கேட்ட உதயநிதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தனியார் பள்ளி ஆசிரியர் சரவணன், சிபிஎஸ்இயில் ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் நிறைய பாடங்களை குறைக்கப்பட்டுள்ளன. அதே போல் நம் பாடத்திட்டத்தில் தேவையற்ற சில பாடங்களை தமிழக அரசு நீக்காமல் அப்படியே வைத்துள்ளது. இதனால் பாடச்சுமையும் படிப்பதற்கான சுமையும் அதிகமாக உள்ளது.
அத்துடன் நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு தயாராக போதிய நேரமின்மை இருக்கிறது. எனவே நடப்பு கல்வியாண்டிலேயே பாடத்திட்டங்களை குறைத்துவிட வேண்டும். தமிழக மாணவர்கள் மீதுள்ள அக்கறை காரணமாக கூறுகிறேன் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications