அரிய வகை நோயால் 6 மாத குழந்தை வர்ணிகா ஸ்ரீ பாதிப்பு! ரூ.16 கோடி மருந்து வாங்க உதவுங்களேன்!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த 6 மாத பெண் குழந்தையான வர்ணிகாஸ்ரீ, முதுகெலும்பு தசை நார் வலுவிழப்பு எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் உயிர் பிழைக்க ரூ.16 கோடி மதிப்பிலான மருந்து செலுத்தப்பட வேண்டும் என்பதால் அவருக்கு உதவி செய்யும்படி பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர், நன்னிலம் வட்டத்திற்குள்பட்ட காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன்- சவுந்தர்யா தம்பதியினர். இவர்களுக்கு நித்விக் ரோஷன் என்ற 5 வயது மகன் உள்ளார். மேலும் வர்ணிகா ஸ்ரீ எனும் 6 மாத பெண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் வர்ணிகா ஸ்ரீக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலே தலை நிற்காமல், கை, கால், அசைவு இல்லாமல் இருந்தது. இதையடுத்து அவரது பெற்றோர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தைக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது குழந்தைக்கு உடல் தசை பலவீனமாக இருப்பது தெரியவந்தது. இதற்கு Spinal Muscular Atrophy stage one (SMA) என்று பெயர். அதாவது முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு நோய். இந்த வினோத நோய் கோடியில் ஒருவருக்குத்தான் வரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நோய் தசை இயக்கத்தைக் கட்டுப்படுத்தி நரம்பு செல்களை சேதப்படுத்துகிறது. அவரது தசைகள் தினமும் பலவீனமடைவதால், அவர் தனது கைகால்களை நகர்த்தவும், விழுங்கவும், சுவாசிக்கவும் கூட சிரமப்படும் நிலை உள்ளது. குழந்தைக்கு உடனடி சிகிச்சைக்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயிர்காக்கும் மருந்துகளான RISDIPLAM மற்றும் ZOLGENSMA தேவை.
இதன் விலை ₹16 கோடி. இந்த நிலையில் குழந்தையை காப்பாற்ற கோரி அவரது பெற்றோர் தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். அது போல் பிரதமர் மோடிக்கும் இவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும் பல்வேறு அறக்கட்டளைகளை அணுகியும் நிதி திரட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் நடந்த சிஎஸ்கே கிரிக்கெட் போட்டியின் போது கூட Save Varnika Sri என்ற பதாகைகளை ஏந்தி பெற்றோர் உதவி கேட்டனர்.
இந்த 16 கோடி ரூபாயை தங்களால் செலவு செய்ய இயலாது என கூறிய பெற்றோர் இதுவரை 1 கோடி ரூபாய்க்கு மேல் உதவி கிடைத்துள்ளது என்றும் மேலும் 8 கோடி ரூபாய் கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த குழந்தைக்கு உதவி செய்யுமாறு மதுரை முத்து, சஞ்சீவ், பிக்பாஸ் முத்துக்குமரன், நடிகை ஸ்ரேயா, அறந்தாங்கி நிஷா, கஞ்சா கருப்பு, கேபிஒய் பழனி, அமுதவாணன், பழனி பண்டாரம், தங்கதுரை, கேபிஒய் பாலா உள்ளிட்டோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அது போல் வரும் ஏப்ரல் 26, 27 தேதிகளில் கும்பகோணத்தில் விஜய் டிவி நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் கலக்கல் சங்கமம் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை பார்ப்பதற்கு விற்பனையாகும் டிக்கெட் கட்டணத்தை வர்ணிகாவின் மருந்து செலவுக்கு கொடுப்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த குழந்தைக்கு நிதி திரட்டும் பணியை நாளை பாரதம் என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனவே ரூ.1, ரூ.5, ரூ.10, ரூ.100 என உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த தொகையை கொடுத்து உதவுங்கள். சிறு துளி பெருவெள்ளம்.
Account name: Soundharya P
Account Number: 3129891896
IFSC code: CBIN0281901
Branch: SOTHUPAKKAM, Chengalpattu
Bank Name: Central Bank of India
இந்த வங்கிக் கணக்கிற்கு பணத்தை செலுத்தலாம். இல்லாவிட்டால் அவர்களது ஜிபே, போன்பே, பே டிஎம் ஸ்கேனர் மூலமாகவும் பணத்தை செலுத்தலாம். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து!












Click it and Unblock the Notifications