வருத்தம்.. அதிர்ச்சி.. வரவேற்பு.. திருவாரூர் தேர்தல் ரத்துக்கு அரசியல் தலைவர்களின் ரியாக்சன்!
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
Recommended Video
திருவாரூர்: திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். பெரும்பாலான அரசியல் தலைவர் இதை வரவேற்று இருந்தாலும், இதற்கு பின் சதி இருப்பதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருந்த திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கையின் அடிப்படையில் தற்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழகத்தை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரு வார பரபரப்பு.. அரசியல் விறுவிறுப்பு முடிவிற்கு வந்தது.. திருவாரூர் தேர்தல் ரத்தானது ஏன்?
பீட்டர் அல்போன்ஸ் கருத்து
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது வரவேற்க்கதக்கது முடிவுதாம். இது எல்லோருக்கும் ஏற்கனவே தெரிந்த விஷயம். பொன்.ராதாகிருஷ்ணனும், தமிழிசையும் சேர்ந்து நேற்று முதல்வரை சந்தித்த போதே தேர்தல் ரத்து முடிவாகி விட்டது. அந்த முடிவை தான் தேர்தல் கமிஷன் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிக்கையாக வெளியிட்டுள்ளது, என்றுள்ளார்.
ஜி.கே.வாசன் கருத்து
தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே.வாசன் தெரிவித்த கருத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது நல்ல விஷயம். அங்கு மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருந்தனர். தேர்தல் ஆணையம் நல்ல முடிவுதான் எடுத்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.
ஓ.எஸ்.மணியன் கருத்து
அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ள கருத்தில், அதிமுக இன்று தனது வேட்பாளரை அறிவிப்பதாக இருந்தது. இந்த தேர்தல் ரத்து ஏமாற்றமளிக்கிறது. தேர்தல் எதிர்கொள்ள இன்முகத்துடன் காத்திருந்தோம். இந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது வருத்தமும், ஏமாற்றமும் அளிக்கிறது, என்றுள்ளார்.
சி.வி.சண்முகம் கருத்து
அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகமும் இதற்கு அதிர்ச்சியான கருத்தையே தெரிவித்துள்ளார். அவர், இந்த தேர்தல் ரத்து அதிர்ச்சி அளிக்க கூடிய ஒன்றுதான். பெரும்பாலும் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது, என்றுள்ளார்.
திருமாவளவன் கருத்து
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வரவேற்றுள்ளார். அவர், இது மிகவும் சரியான முடிவு. தேர்தலை ஒத்தி வைத்தது சரிதான். தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலோடு 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தும் என நம்புகிறோம், என்றுள்ளார்.