பழைய ஓய்வூதியம், பணி நிரந்தரம்.. களம் இறங்கிய ஆசிரியர்கள்.. முதல்வருக்கு பறந்த கோரிக்கை
திருவாரூர்: பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியத்தை வழங்க வேண்டும். 15 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள ஆசிரியர் காலி பணி இடங்களை உடனடியாக நிரப்பி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என்று ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.
தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, 40 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு பாராட்டு விழா, வெள்ளி விழா கண்ட பள்ளிகளுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா திருவாரூர் மாவட்டத்தில் நடந்தது. இதில் அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் நிருபர்களிடம் மாநில பொதுச் செயலாளர் தாஸ் கூறுகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியத்தை வழங்க வேண்டும். 15 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள ஆசிரியர் காலி பணி இடங்களை உடனடியாக நிரப்பி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என்றார்.
இதனிடையே தமி்ழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோவையில் இருந்து ஆதிதமிழர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வருக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், "தமிழக அரசுப் பள்ளிகளில் 13 ஆண்டுகள் கடந்தும் பகுதிநேர ஆசிரியர்கள் தற்போதும் ரூபாய் 12,500 என்ற குறைந்த தொகுப்பூதியத்தில் தற்காலிக நிலையில் பணியாற்றி வருகின்றனர்.
உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி உள்ளிட்ட பாடங்களில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதை நம்பி 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் உள்ளன.
மே மாதம் சம்பளம் மற்றும் அரசு சலுகைகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. இன்றைய விலைவாசி உயர்வில் இந்த சொற்ப சம்பளத்தை வைத்துக் கொண்டு அடிப்படைத் தேவைகளைகூட பூர்த்தி செய்ய முடியவில்லை என பரிதவிக்கின்றனர். இதில் பெரும்பாலும் 50 வயதை கடந்து விட்டனர். மேலும் மாற்றுத்திறனாளிகள், விதைவை பெண்கள், 50 சதவீதம் பெண் ஆசிரியர்கள் மற்றும் ஏழை விவசாய குடும்பங்களைச் சேர்ந்த சமுதாயத்தில் கஷ்டப்படுகின்றவர்கள் தான் அதிகம் உள்ளார்கள்
14 ஆண்டு தொகுப்பூதியத்தை கைவிட்டு, காலமுறை சம்பளம் வழங்கினால் மட்டுமே அரசு சலுகைகள் கிடைத்து இவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில் உரையில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் குறித்து முதல்வர் நல்ல முடிவை அறிவிப்பார் என தெரிவித்துள்ளார். எனவே, தமிழக முதல்வர் அவர்கள் பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்பான தேர்தல் வாக்குறுதியை இந்த பட்ஜெட் தொடரிலேயே 110 விதியின் கீழ் நிறைவேற்றி அறிவிக்க வேண்டும். என ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஏப்ரல் 24ம் தேதி பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய அன்பில் மகேஷ், திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தான் பகுதிநேர ஆசிரியர்களுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டது என்றும், ரூ.2 ஆயிரத்து 500 ஊதிய உயர்வு வழங்கப்பட்டது என்றும் கூறினார். பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை மறுக்கவில்லை என்று கூறிய அன்பில் மகேஷ், பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவை அறிவிப்பார் என்றார்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவது போல். தமிழக அரசு ஊழியர்களுக்கும் 2 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படும். இதன் மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றார்.
மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகைப்படி ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் உயர்த்தப்படும். இதனால், 8 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். பொங்கல் பண்டிகைக்கு சி, டி பிரிவு அரசு ஊழியர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பரிசு தொகை ரூ.500-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்படும். ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.4000-ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தப்படும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு 9 மாதங்களுக்குள் அதாவது, செப்டம்பர் 30-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்று பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications