விருப்பப்படும் தமிழிசை.. யோசிக்கும் மேலிடம்.. திருவாரூரில் பாஜக போட்டியிடுமா.. விரைவில் அறிவிப்பு?
திருவாரூர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா என்பது குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Recommended Video
சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா என்பது குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இடைத்தேர்தல் காரணமாக திருவாரூர் தொகுதி பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது. ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது. திமுக, அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் ஏற்கனவே தங்கள் வேட்பாளரை அறிவித்துவிட்டது. அதிமுக இதற்காக தீவிர ஆலோசனையில் உள்ளது.
இன்னும் இல்லை
இந்த தேர்தலில் போட்டியிட போகும் வேட்பாளர்களை மற்ற கட்சிகள் அறிவித்துவிட்டாலும் இன்னும் பாஜக அறிவிக்கவில்லை. இதுகுறித்து பாஜக சார்பாக இன்னும் ஆலோசனை கூட செய்யப்படவில்லை. தேசிய தலைவர்கள், பாஜக நிர்வாகிகள் இதுகுறித்து கவலைபடுவதாகவும் தெரியவில்லை.
பாஜகவில் எதிர்ப்பு
பாஜகவில் இருக்கும் சில முக்கிய தலைவர் திருவாரூர் இடைத்தேர்தலில் பாஜக நிற்க கூடாது என்று கூறியதாக தகவல்கள் வருகிறது. ஏற்கனவே ஆர்.கே நகரில் தோல்வி அடைந்துவிட்டோம், திருவாரூரில் தோற்க வேண்டாம் என்று பாஜக கூறியதாக தகவல்கள் வருகிறது. இதனால் பாஜக இங்கு வேட்பாளரை நிறுத்துமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழிசை முடிவு
ஆனால் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக திருவாரூர் தேர்தலில் நிற்பதையே விரும்புவதாக தெரிகிறது. பாஜக சார்பாக திருவாரூர் தேர்தலில் நல்ல வேட்பாளரை நிறுத்த தமிழிசை சௌந்தரராஜன் முயன்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் டெல்லி பாஜக உத்தரவிற்காக அவர் காத்திருப்பதாக தகவல்கள் வருகிறது.
இன்று அறிவிப்பா
இந்த நிலையில் இன்று பாஜக இதுகுறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. திருவாரூர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாஜக இன்று அறிவிக்கும். போட்டியிடாத பட்சத்தில், பாஜக தேர்தலில் யாரை ஆதரிக்க போகிறோம் என்ற நிலைப்பாட்டையும் வெளியிட வாய்ப்புள்ளது.