திருவாரூர் காதல் பிரச்சனை.. சட்டென குளத்தில் குதித்த காதலன்.. காதலி எடுத்த அதிர்ச்சி முடிவு
திருவாரூர்: திருவாரூர் இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் அறிமுகமாகி காதலித்து வந்தார். ஆரம்பத்தில் நன்றாக சென்றாலும். சமீப காலமாக அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இளைஞர் மிகவும் வேதனையடைந்துள்ளார். கடைசியாக காதலர்கள் இருவரும் குளத்தின் அருகில் அமர்ந்து பேசியுள்ளனர். அப்போது பெண் காதல் வேண்டாம் என்று உறுதியாக மறுத்துள்ளார். இதில் வேதனையடைந்த இளைஞர் திடீரென குளத்தில் குதித்து தற்கொலை செய்தார். அவரைக் காப்பாற்றுவதற்காக அந்தப் பெண்ணும் குளத்தில் குதித்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மருதப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 21). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஜெஶ்ரீ (வயது 19) என்பவருடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த 2 வருடங்களாக பிரவீன்குமார் - ஜெயஶ்ரீ காதலித்து வந்துள்ளனர்.

குளத்தில் குதித்த காதலன்
செல்போனில் பேசியும், அவ்வப்போது வெளியில் சென்றும் காதலித்துள்ளனர். இந்நிலையில் இந்த காதலை தொடர வேண்டாம் என்று ஜெயஶ்ரீ கடந்த சில நாட்களாக கூறி வந்துள்ளார். அதை ஏற்க மறுத்த பிரவீன், காதலை தொடர வேண்டும் என்று ஜெயஶ்ரீயிடம் கூறியுள்ளார். பிரவீன் நேற்று ஜெயஶ்ரீயை சந்திப்பதற்காக கும்பகோணம் சென்றுள்ளார். அங்கிருந்து அவரை பைக் மூலம் திருவாரூர் அழைத்து வந்துள்ளார்.
திருவாரூர் திருக்கண்ணமங்கை அருகே உள்ள சேட்டாகுளம் கரை அருகே இருவரும் அமர்ந்து பேசி வந்தனர். அப்போது பிரவீன் காதலை தொடர வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் ஜெயஶ்ரீ, வீட்டில் பெற்றோர் அனுமதிக்க மாட்டார்கள். எனவே இந்த காதலை தொடர வேண்டாம் என்று மீண்டும் அழுத்தமாக கூறியுள்ளார். இதில் மனமுடைந்து வேதனையான பிரவீன், திடீரென ஓடி சென்று அருகில் உள்ள குளத்தில் குதித்துவிட்டார்.
காதலியும் அதிர்ச்சி
இதை எதிர்பார்க்காத ஜெயஶ்ரீ அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து அவரும் குளத்தின் அருகில் சென்று பிரவீனை அழைத்துள்ளார். எந்த பதிலும் வராததால் அவரைக் காப்பாற்றுவதற்காக ஜெயஶ்ரீயும் குளத்தில் இறங்கியுள்ளார். இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத்துறை, காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து மீட்க முயற்சி செய்துள்ளனர்.
இருவரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் பிரவீன்குமார் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். ஜெயஶ்ரீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து குடவாசல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications