பாட்டில் வீச்சில் ட்விஸ்ட்.. திமுக புகாரால் நாம் தமிழர் நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு! என்னாச்சு?
திருவாரூரில் கடந்த 26ம் தேதி இரவு நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் திமுகவினர் காலி மதுப்பாட்டில்களை வீசினர்.
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 26ம் தேதி இரவு நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்ததாக கூறி மேடையில் பேசிய பெண் பேச்சாளர் மீது திமுகவினர் காலி மதுப்பாட்டில்களை வீசியதாக கூறப்படுகிறது. இதில் 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது திமுகவினர் செய்த புகாரால் நாம் தமிழர் கட்சியின் பெண் பேச்சாளர் காளியம்மாள் உள்பட 2 நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் திமுக அரசை, நாம் தமிழர் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக சீமான் உள்ளார். இந்நிலையில் தான் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சித்தமல்லி கடைத்தெருவில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் கடந்த 26ம் தேதி இரவு நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர். அப்போது கட்சியின் நிர்வாகிகள் பொதுக்கூட்டத்தில் பேசினர்.

பொதுக்கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு
இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் நாம் தமிழர் கட்சியின் கொள்கை, செயல்பாடு பற்றிய கருத்துகளை எடுத்துரைத்தார். மேலும் ஆளும் திமுக அரசையும் சுட்டிக்காட்டி அவர் சில கருத்துகளை தெரிவித்தார். இந்த வேளையில் ஸ்டாலினுக்கு எதிராக பேசியதாக கூறி அங்கிருந்த சிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பொதுக்கூட்ட மேடையை நோக்கி காலி மதுபாட்டில்களை வீசினர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை.

2 பேர் கைது
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நாம் தமிழர் கட்சியினர் இந்த பாட்டில் வீச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பாட்டில் வீசிய கும்பல் அங்கிருந்து ஓடியது. இதுபற்றி விசாரித்த போலீசார் 2 பேரை பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திமுகவினர் தான் என நாம் தமிழர் கட்சியினரும் குற்றம்சாட்டி இருந்தனர். மேலும் இந்த சம்பவத்துக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

திமுக சார்பில் புதிய புகார்
இதற்கிடையே தான் கோட்டூர் ஒன்றிய திமுக துணை செயலாளர் இனியசேகரன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அதில் முதல்வர் ஸ்டாலின் குறித்து தரக்குறைவாகவும், அவதூறு பரப்பும் வகையிலும் நாம் தமிழர் கட்சியினர் நிர்வாகிகளான காளியம்மாள் மற்றும் இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் பேசியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.

நாம் தமிழர் கட்சி மீது வழக்கு
இந்த புகாரை பெற்று கொண்ட போலீசார் நாம் தமிழர் நிர்வாகிகள் காளியம்மாள் மற்றும் இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்கு நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக அரசை சாடியுள்ளார். அதில், ‛‛பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்கு போடுவது தான் திராவிட மாடலோ?. தமிழகத்தில் வாய்ப்பூட்டு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த நினைப்பதும் தான் சமூக நீதியோ? மகளிர் உயர, மாநிலம் உயர்வது மதுபாட்டிலை தூக்கி பெண் மீது அடித்து தானோ?'' என கேள்விகள் எழுப்பி விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications