திருவாரூர் பிடிஓ-க்கு வந்த ஆசை.. இப்போ ஒட்டு மொத்த மானமும் போச்சே! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் வீட்டுமனை ஒப்புதல் ரசீது வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அவரது உதவியாளரை திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். லஞ்சம் பெரும் போது பின்னால் மறைந்திருந்த போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே லஞ்ச ஒழிப்பு போலீசார் விரிக்கும் அளவில் அரசு அதிகாரிகள் தொடர்ந்து சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் என ஆகிவிட்டது எங்கு போனாலும் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் பெற முடியாது. பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை லஞ்சம் தான் எங்கும் பரவிக் கிடக்கிறது என குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள்.

அதே நேரத்தில் தமிழ்நாடு அரசு லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் லஞ்ச பணத்துடன் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். பத்திரப் பதிவு அலுவலகங்கள் தொடங்கி கிராம நிர்வாக அலுவலகங்கள் வரை பொறிவைத்து அதிகாரிகளை கைது செய்து வருகின்றனர் லஞ்ச ஒழிப்பு போலீசார்.
அந்த வகையில் தான் திருவாரூர் 7000க்கு ஆசைப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் கீழகாவாதுகுடி பகுதியைச் சேர்ந்த பாரதிதாசன் தனது வீட்டுமனைக்கு அப்ரூவல் பெறுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதனை அணுகியுள்ளார். அப்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் அவரது உதவியாளர் சுரேஷ்குமார் ஆகியோர், வீட்டுமனை ஒப்புதல் ரசீது வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் லஞ்சம் வழங்க விருப்பமில்லாத பாரதிதாசன் இது குறித்து திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.புகாரை தொடர்ந்து காவல்துறையினர் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு லஞ்சம் கேட்கப்பட்டதாக உறுதி செய்த பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பிடிக்க திட்டமிட்டனர். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பாரதிதாசனின் 7 ஆயிரம் பணத்தில் ரசாயனம் தடவி லஞ்ச ஒழிப்புத் துறையினர் பாரதிதாசனனிடம் கொடுத்தனர்.
இந்த நிலையில் இன்று திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பாரதிதாசன், அதிகாரிகளிடம் பணத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதனிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையிலான காவல்துறையினர் திடீரென உள்ளே நுழைந்து வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் அவரது உதவியாளர் சுரேஷ்குமார் ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர்.
தொடர்ந்து இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அரசு அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications