பணத்தை பங்கு பிரிப்பதில் பஞ்சாயத்து? பாஜக மாஜிக்கு அரிவாள் வெட்டு.. பாஜக தலைவர் பாஸ்கர் அதிரடி கைது!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் மதுசூதனன் வெட்டப்பட்ட சம்பவத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குடவாசல் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு முன்னதாக பாஜக தலைமை கொடுத்த பணம் பூத் வரை செல்லவில்லை எனவும், சில வேட்பாளர்களே பணத்தை செலவு செய்யாமல் சுருட்டிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கையை தயாரித்து அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே இந்த தகராறில் பாஜகவுக்கு வெட்டு குத்து சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவில் பரபரப்பு: திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே இருக்கும் காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் மது என்ற மதுசூதனன். பாஜக மாவட்ட விவசாய தலைவராக பொறுப்பு வகித்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி தனது வீட்டில் இருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிய அவரை அருகில் இருந்தோர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கொலை முயற்சி: தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது ஐசியூ வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்ட பாஜகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மதுசூதனனின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பங்கிடுவதில் பஞ்சாயத்து: அதில் பாஜக உட்கட்சி மோதலில் மதுசூதனன் வெட்டப்பட்டது தெரிய வந்தது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் பணத்தை பங்கு வகிப்பது தொடர்பாக தகராறு நடந்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பூத் கமிட்டி செலவுக்காக பாஜக தலைமை கொடுத்த பணத்தை பிரிப்பது தொடர்பாக மாவட்ட தலைவராக இருக்கும் பாஸ்கருக்கும் மதுசூதனனுக்கும் இடையே பிரச்சனை இருந்திருக்கிறது.
கொலை முயற்சி: தொடர்ந்து பாஸ்கர் குறித்து மது சமூக வலைதள பக்கங்களில் அவதூறாக பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் செந்திலரசன் என்பவர் மூலம் கூலிப்படையை அழைத்து மதுசூதனனை கொலை செய்ய திட்டமிட்டதும் அந்த கும்பலை கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் பொதுச் செயலாளர் செந்திலரசன் உள்ளிட்ட நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தலைவர் கைது: இந்நிலையில் ஏற்கனவே பாஜக பிரமுகர் ஜெகதீசன் அவரது கூட்டாளி சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வழக்கின் குற்றவாளியாக கருதப்படும் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரை குடவாசல் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications