Thiruvarur: திருமணம் முடிந்து 5 மாசம்தான் ஆகுது.. திருவாரூர் அருகே புது மாப்பிள்ளைக்கு நடந்த துயரம்
திருவாரூர்: திருவாரூர் திருத்துறைப்பூண்டி அருகே மாமனார் வீட்டில் இருந்த மனைவியை பார்த்துவிட்டு, நள்ளிரவில் காரில் வீட்டுக்கு புறப்பட்ட போது நடக்கக்கூடாத துயர சம்பவம் நடந்துள்ளது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் தடுப்பு சுவரில் மோதி தீப்பிடித்தது. இதில் காரில் தீப்பற்றிய நிலையில் காரின் கதவுகளை திறந்து வெளியே வரமுடியாமல், காருக்குள்ளேயே இருந்து தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருமணம் ஆகி 5 மாதங்களே ஆன நிலையில் புதுமாப்பிள்ளை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் அருகே உள்ள விஜயபுரம் செல்வம் தெருவை சேர்ந்தவர் ஹாஜி முகமது. பனகல் சாலை அருகே மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் முகமது ரபிக் (வயது 28). இவருக்கு கடந்த 5 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து இருந்தார்.
கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் மனைவி தன் அம்மா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றிருக்கிறார். இதனால் மனைவியை பார்ப்பதற்காக நேற்று முன் தினம் இரவு காரில் புதுக்கோட்டைக்கு முகமது ரபீக் சென்றுள்ளார். மனைவியை பார்த்துவிட்டு நேற்று இரவு மீண்டும் திருவாரூருக்கு புறப்பட்டுள்ளார்.
திருத்துறைப்பூண்டி- திருவாரூர் சாலையில் நள்ளிரவு 2.30 மணியளவில் முகமது ரபீக் காரில் வந்துகொண்டிருந்தார். நாகை பைபாஸ் சாலை பகுதியில் சென்ற போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் சாலையின் தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. உடனே கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. காருக்குள் சிக்கிக்கொண்ட முகமது ரபிக்கால் வெளியே வர முடியவில்லை. உதவி கேட்டு அலறியுள்ளார்.
நள்ளிரவு நேரம் என்பதால் அந்த சாலையில் அந்த நேரத்தில் யாரும் இல்லை.. கொஞ்சம் கொஞ்சமாக கார் தீப்பிடித்து முழுவதுமாக எரியத் தொடங்கியது. இதனால் கார் கதவை திறந்து வெளியே வரமுடியாமல் அப்படியே தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
தீயணைப்பு படையினர் உடனடியாக காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் காருக்குள் பிணமாக உடல் கருகிய நிலையில் முகமது ரபீக் மீட்கப்பட்டார். அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியை பார்த்துவிட்டு வீடு திரும்பிய போது, புதுமாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications