எய்ம்ஸ் செங்கலுக்கு சிலை வடித்த டி.ஆர்.பி.ராஜா! பூரிப்புடன் வாங்கிக் கொண்ட உதயநிதி ஸ்டாலின்!
உதயநிதிக்கு டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. கொடுத்த வித்தியாசமான நினைவுப்பரிசு.
திருவாரூர்: மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாததை ஒற்றை செங்கலுடன் சென்று தமிழகம் முழுவதும் கடந்த தேர்தல்களில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் அவருக்கு அதே செங்கலை சிலையாக வடித்து நினைவு பரிசளித்திருக்கிறார் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ.
வடுவூரில் நடைபெற்ற உள் விளையாட்டரங்கம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி, டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ கொடுத்த இந்த வித்தியாசமான பரிசை பூரிப்புடன் பெற்றுக்கொண்டார்.
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் உதயநிதி ஸ்டாலினை 'இளந்தலைவர்' என்ற புதிய அடைமொழியுடன் அந்த சிலையில் குறிப்பிட்டிருப்பது தான்.

சுற்றுப்பயணம்
திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை என டெல்டா மாவட்டங்கள் முழுவதும் கடந்த 3 நாட்களாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று திருவாரூர் செல்லும் வழியில் வடுவூரில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான உள் விளையாட்டரங்கத்தை திறந்து வைக்கச் சென்றார். மாலை 5 மணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்வார் என விளம்பரங்கள் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தஞ்சாவூர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அவர் வடுவூர் சென்றடைய இரவு 8.30 ஆகிவிட்டது.

உதயநிதி பேச்சு
இதனிடையே இந்தியாவிலேயே விளையாட்டுக்கு பெயர் போன ஊரான வடுவூரில் மிகவும் உற்சாகமாக பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உள் விளையாட்டரங்கம் மேம்பாட்டு பணிக்காக திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதி கொடுத்ததுடன் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஒரு செக்கையும் வைத்தார். அதாவது உங்கள் தொகுதி எம்.எல்.ஏ. ராஜா தனது சொந்த நிதியிலிருந்து உள் விளையாட்டரங்க மேம்பாட்டு பணிக்காக தாராளமாக நிதி வழங்குவார் எனக் கூறினார்.

எய்ம்ஸ் செங்கல்
அந்த நிகழ்ச்சியில் பேசி முடித்துவிட்டு புறப்பட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் செங்கல்லை தூக்கி காட்டி, எய்ம்ஸ் கட்டுமானப் பணியின் நிலை குறித்து பேசிய நிகழ்வை அப்படியே தத்ரூபமாக சிலை வடித்து அதனை பரிசாக கொடுத்தார் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. அந்த சிலையில் உதயநிதி ஸ்டாலின் கட்டிய வாட்ச் கூட அப்படியே இடம்பெற்றிருந்தது. இதனை எதிர்பார்க்காத அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பூரிப்போடு அதனை வாங்கிக் கொண்டார்.

இளந்தலைவர்
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் உதயநிதி ஸ்டாலினை 'இளந்தலைவர்' என்ற புதிய அடைமொழியுடன் அந்த சிலையில் குறிப்பிட்டிருப்பது தான். இதுவரை சின்னவர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு இளந்தலைவர் என்ற புதிய அடைமொழியை சூட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications