காரைக்கால் :டூ தஞ்சாவூர் வரை இருவழிப்பாதை ? திருவாரூர் டூ கன்னியாகுமரி ரயில்.. அதிகாரி தந்த விளக்கம்
திருவாரூர்: திருவாரூரில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளை தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையிலான மின் வழி பாதை பணிகள் டிசம்பர் மாதம் நிறைவடையும் என தெரிவித்தார். திருவாரூரில் இருந்து கன்னியாகுமரிக்கு புதிதாக ரயில்கள் இயக்கப்படுமா? என்ற கேள்விக்கும் அவர் பதில் அளித்தார்.
திருவாரூர் ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 8 கோடியே 69 லட்சம் மதிப்பில் கட்டுமான பணிகள், ரயில் பயணிகள் முன்பதிவு மைய பணிகள், பயணிகள் காத்திருப்போர் கட்டிடம், முகப்பு வாசல் போன்ற பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளை தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக புதிதாக கட்டப்பட்ட முதுநிலை பிரிவு பொறியாளர் அலுவலகம், தொழிலாளர் நலனுக்காக கட்டப்பட்டுள்ள பேட்மிட்டன் உட்புற விளையாட்டு அரங்கம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள டிக்கெட் கவுண்டரை பொது பயன்பாட்டிற்கு அன்பழகன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து திருவாரூர் ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் பராமரிப்பு, சிக்னல் விளக்குகள் பராமரிப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து தண்டவாளங்களில் உள்ள பாயிண்ட்ஸ் மற்றும் கிராசிங் லெவல் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருவாரூரில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து விட்டது. இன்னும் உள்ள பணிகள் அடுத்த இரண்டு மாதத்தில் முடிவடையும், திருவாரூர் வழியாக ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் எக்ஸ்பிரஸ் புதிதாக இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டுள்ளது என்றார். திருவாரூரில் இருந்து கன்னியாகுமரிக்கு புதிதாக ரயில்கள் இயக்கப்படுமா? என்ற கேள்விக்கு நாங்கள் பரிந்துரை மட்டும்தான் செய்ய முடியும் என்று கூறினார்.
மேலும் அன்பழகன் கூறுகையில், பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையிலான ரயில் தடத்தில் மின்சார பணிகள் குறித்த கேள்விக்கு. மின் பாதை அமைக்கும் பணிகள் வருகிற டிசம்பர் மாதத்தில் நிறைவடைய வாய்ப்பு உள்ளது என்று காரைக்காலில் இருந்து தஞ்சாவூர் வரை இருவழிப் பாதை அமைக்கப்படுமா? என்று கேள்விக்கு இறுதி கட்ட ஆய்வு பணிகள் முடிவுற்ற உள்ள நிலையில் அதற்கு பின்னர் தான் செயல்முறை பணிகள் தொடங்கும் கூறினார்.












Click it and Unblock the Notifications