திருவாரூர் அருகே.. அத்துமீறிய வேகத்தில் போன மணல் கடத்தல் டிராக்டர்கள் மோதியதில் 2 வாலிபர்கள் பலி!
திருவாரூர் : திருவாரூர் அருகே அனுமதியில்லாமல் மணல் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த 2 டிராக்டர்கள், சாலையில் போட்டிப் போட்டுக்கொண்டு முந்திச் செல்ல முயன்றபோது, இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில், 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த செம்படவன்காடு கிழக்கு கடற்கரை சாலையில் சிக்கன் கார்னர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஹாஜா நகரை சேர்ந்த ஹபிபுல்லா மகன் பயாஸ் அகமது, அதிராம்பட்டினம் சின்ன நெசவு தெருவை சேர்ந்த அப்துல் காதர் மகன் ஷகீல் அகமது ஆகிய இருவரும் வேலை பார்த்து வந்தனர்.

இருசக்கர வாகனம் மோதிய டிராக்டர்
நேற்றிரவு வழக்கம்போல் பணியை மூடிவிட்டு இருசக்கர வாகனத்தில் இருவரும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். முத்துப்பேட்டை அருகே பாமணி ஆற்று பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, சட்டவிரோதமாக மணல் ஏற்றிக்கொண்டு வேகமாக 2 டிராக்டர்களை ஓட்டி வந்த அதன் ஓட்டுநர்கள், ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக்கு கொண்டு சாலையில் முந்திச் செல்ல முயன்றனர். இதில் ஒரு டிராக்டர், எதிர்பாராத விதமாக இளைஞர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்கள்
இந்த விபத்தில், இருச்சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த பயாஸ் அகமது, ஷகீல் அகமது ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், இருவரையும் உடனடியாக மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இளைஞர்களின் உடல்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஓட்டுநர் கைது - போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்த தகவலின்பேரின் சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை போலீசார், விபத்தை ஏற்படுத்திய இரண்டு டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். மேலும், சாலையில் முந்திச் செல்வதற்காக போட்டிப் போட்டுக்கொண்டு டிராக்டரை ஓட்டி வந்த முத்துப்பேட்டை கொய்யா தோப்பு பகுதியை சேர்ந்த ஓட்டுநர் கார்த்தி என்பவரை கைது செய்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடி மற்றொரு டிராக்டர் ஓட்டுநரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்ததோடு, சாலையில் போட்டிப் போட்டுக்கொண்டு முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications