கீரிப்பிள்ளை கோழியை பிடிக்க வந்து, சிறுவனை தீண்டி.. மெல்ல உடம்பில் ஏறிய விஷம்.. ஆடிப்போன திருவாரூர்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள அந்த சிறிய கிராமத்தில், நடந்த சம்பவம், இன்று தமிழக மக்களை உலுக்கி எடுத்துள்ளது.. 7 வயது சிறுவனுக்கு இப்படியொரு கொடுமையான நிலைமை வரவேண்டுமா? என்று கவலை தெரிவித்து வருகிறார்கள்.. என்ன நடந்தது சிறுவனுக்கு?
முத்து - தேவி தம்பதியின் மகன்தான் இந்த 7வயது சிறுவன் நவீன்.. கொரடாச்சேரியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான்..

முத்து - தேவி தம்பதியினர் தங்கள் வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார்கள்.. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, ஒருநாள் நள்ளிரவு நேரத்தில், இந்த கோழிகளை தேடி ஒரு கீரிப்பிள்ளை வந்துள்ளது..
கீரிப்பிள்ளை கடித்த காயம்
அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு படுத்து தூங்கி கொண்டிருந்த நவீனின் பிஞ்சுக்கரத்தை கீரிப்பிள்ளை கடித்துவிட்டது.. இதனால் அலறி எழுந்த நவீன், வலியால் துடிதுடித்து கதறினான்.. உடனே பெற்றோர் மகனை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள்.. அங்கே நவீனுக்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்டது.. பிறகு கீரிப்பிள்ளை கடித்த காயத்துக்கு மருந்தும் போடப்பட்டது..
இதனால் காயம் மெல்ல ஆறிவிட்டது.. கீரிப்பிள்ளை கடித்த இடத்தில் வலியும் மறைந்துவிட்டது. வழக்கம்போல் நவீனும் பள்ளிக்கு சென்றான்.. நண்பர்களுடன் விளையாட தொடங்கினான்,..
ஆனால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு, திடீரென நவீனுக்குக் காய்ச்சல் வந்துள்ளது.. ஆரம்பத்தில் சாதாரணக் காய்ச்சல் என்று பெற்றோர் நினைத்துள்ளனர்.. ஆனால், நேரம் ஆக ஆக காய்ச்சலின் தீவிரம் அதிகமானது.. இதனால் பயந்துபோன பெற்றோர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மகனை அனுமதித்தனர்..
உடம்பில் ஏறிய விஷக்கிருமி
ஆனால் டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் நவீனை காப்பாற்ற முடியவில்லை.. 3 மாதங்களுக்கு முன்பு அந்தச் சிறுவன் உடலில் ஏறிய விஷத்தொற்று, தற்போது அவனது உயிரையே குடித்துவிட்டது..
மகனின் இறப்பை கண்ணெதிரே பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதது காண்போரை நிலைகுலைய வைத்தது.. பிறகு, சுகாதார ஆய்வாளர்கள் முன்னிலையில் அந்தச் சிறுவனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.. கிராம மக்கள் திரண்டு வந்து கண்ணீருடன் சிறுவனின் உடலை நல்லடக்கம் செய்தனர்..
கீரிப்பிள்ளை கடிக்குமா?
பொதுவாக, கீரிப்பிள்ளை மனிதர்களை தாக்கும் அல்லது கடிக்கும் விலங்கு கிடையாது என்கிறார்கள்.. அது மிகவும் பயந்த இயல்புடையதாம்.. ஆனால் தன்னை ஆபத்திலுள்ளதாக உணர்ந்தால், பிடிக்க முயன்றால் அல்லது காயப்படுத்தினால் மட்டுமே கடிக்கும் வாய்ப்பு உள்ளது.
கீரிப்பிள்ளைக்கு பாம்பை போல தனியான விஷப்பற்களும் இல்லை. அதாவது, கீரிப்பிள்ளையின் கடியில் விஷத்தன்மை கிடையாது. ஆனால் அதன் வாயில் உள்ள கிருமிகள் காரணமாக, கடித்த இடத்தில் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறுகிறார்கள்.
உடனே என்ன செய்ய வேண்டும்
கடித்தால் அந்த இடத்தில் வலி, வீக்கம், சிவப்பு நிறம், அல்லது புண் உருவாகலாம். சில சமயங்களில் சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் காயம் மோசமாகும் என்றுகூட டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்..
அதனால்தான் கீரிப்பிள்ளை கடித்தால் உடனடியாக அந்த இடத்தை சுத்தமான தண்ணீர், சோப்பால் நன்றாக கழுவ வேண்டும். பிறகு ஆன்டிசெப்டிக் மருந்து தடவ வேண்டும்.. ஒருவேளை ஆழமாக இருந்தால் அல்லது அதிக வலி, வீக்கம், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று அறுவுறுத்தப்படுகிறார்கள்..
ஒருவேளை ஆழமாக கடித்திருக்குமோ என்ற சந்தேகம் இருந்தால், மருத்துவர்கள் ரேபீஸ் தடுப்பூசி போடவும் வாய்ப்புண்டு...!!












Click it and Unblock the Notifications