அட யாருங்க இது!.. நெட்டிசன்கள் கொண்டாடும் திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்.. வைரல் பின்னணி!
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி காயத்ரி கிருஷ்ணன் இணையத்தில் வைரலாகி வருகிறார். சிறப்பான நிர்வாக பின்னணி கொண்ட இவரை இப்போதே திருவாரூர் மக்கள் கொண்டாட தொடங்கி விட்டனர்.. யார் இவர்?!
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக மாவட்ட ஆட்சியர்கள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வருகிறார்கள். பல இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஆட்சியர் பொறுப்பு வழங்கப்பட்டு வருகிறது. மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பல்வேறு துறையில் நிர்வாகிகளாக போடப்பட்டு வரும் நிலையில், இளம் அதிகாரிகள் ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் நேற்று முதல் நாள் 54 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இதில் 24 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர்
இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியார் வே.சாந்தா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக காயத்ரி கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி காயத்ரி கிருஷ்ணன் இணையத்தில் வைரலாகி வருகிறார். கடந்த சில இரண்டு நாட்களாக யாருங்க இது என்று நெட்டிசன்கள் பலர் டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் கேட்டு வருகிறார்கள்.

அழகு
மிகவும் அழகான அதிகாரியாக இருப்பதால் நெட்டிசன்கள் பலர் இவரின் புகைப்படத்தை பகிர்ந்து, வைரலாக்கி வருகிறார்கள். ஆனால் அழகு என்பதை தாண்டி, மக்கள் மத்தியில் பெரிய அளவில் கவனம் பெற்ற, மிகவும் திறமையான, துடிப்பான ஐஏஎஸ் அதிகாரிதான் காயத்ரி கிருஷ்ணன். கோவையில் வணிகவரித்துறை (மாநில வரிகள்) மாவட்ட இணை ஆணையராகப் பதவி வகித்த காயத்ரி கிருஷ்ணன் மாற்றப்பட்டு, திருவாரூருக்கு வந்துள்ளார்.

பொள்ளாச்சி
பொள்ளாச்சி சார் ஆட்சியராக இருந்தவர்தான் காயத்ரி கிருஷ்ணன். கேரளாவை சேர்ந்த இவர், பொள்ளாச்சியில் சார் ஆட்சியராக இருக்கும் போது அதிகம் கவனம் பெற்றார். மக்களிடம் அதிக நெருக்கமாக பழகியவர். பொள்ளாச்சியில் மரங்களை வெட்டாமல் சாலை போடும் திட்டத்திற்காக, மரங்களை வேறு இடங்களுக்கு அப்படியே மாற்றும் திட்டத்தை கொண்டு வந்தார். மிக கடினமான இந்த திட்டத்தை மக்கள் உதவியோடு செய்தார்.

மக்கள்
நேரடியாக மக்களிடம் உதவி கேட்டு, பல்வேறு இளைஞர்கள் அமைப்பின் மூலம், மரங்களை வெட்டாமல் சாலை அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். கோவையிலும் வணிகவரித்துறை இணை இயக்குனராக கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டதால் இவர் கவனம் பெற்று தற்போது, திருவாரூர் ஆட்சியராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

கேரளா
கேரளாவில் பிறந்த ஐஏஎஸ் அதிகாரி என்பதால் தமிழ் வேகமாக கற்றுக்கொண்டு, மக்களிடையே நெருக்கமாக பழகி வருகிறார். முதுகலை மேலாண்மை படித்துவிட்டு, திருமணம் முடித்து வெளிநாடு சென்றவர், அங்கு குழந்தை பிறந்த பின்தான் ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து, இந்த பொறுப்பிற்கு வந்து இருக்கிறார். ஆம் வீட்டில் குழந்தையை கவனித்துக்கொண்டு, வெளிநாட்டில் இருந்தபடியே, கோச்சிங் சென்டர் உதவி எல்லாம் இன்றி, வீட்டிலேயே படித்து ஐஏஎஸ் ஆனவர்.

மக்கள்
குழந்தையை கவனிக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் படித்து இவர் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவரின் திறமை மற்றும் மக்களிடம் பழகும் விதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது திருவாரூர் ஆட்சியர் பொறுப்பு தேடி வந்துள்ளது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் காயத்ரி கிருஷ்ணன், மக்களுடன் டிவிட்டர் மூலம் தொடர்பில் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications