திருப்பதி அலிபிரி மலை பாதையில் சிறுத்தை நடமாட்டம்! பக்தர்களுக்கு புதிய நிபந்தனைகள்!
திருப்பதி: திருப்பதி மலைப் பாதையில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதனால் பக்தர்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அலிபிரி மலை பகுதி வழியாக செல்லும் பக்தர்களுக்கே இது போன்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி மலை பாதையில் சிறுத்தைகள் நடமாட்டம் என்பது பிரச்சினையாகவே இருந்து வருகிறது. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய இரு மலை பாதைகள் வழியாக நடந்து செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதாவது ஸ்ரீவாரி மெட்டு, அலிபிரி. இந்த நடைபாதைகள் மூலம் நடந்து வரும் பக்தர்களுக்கு முக்கால்வாசி தூரத்தை அடைந்தவுடன் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. அண்மைக்காலமாக திருப்பதி மலை பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களுக்கு புதிய நடைமுறையை தேவஸ்தானம் விதித்துள்ளது. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலிபிரி வழியாக நடைபாதையில் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு அலிபிரி நடைபாதையில் சென்ற பக்தர்கள் 7ஆவது மைல் அருகே சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நடைபாதையில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டதால் தேவஸ்தான விஜிலென்ஸ், வனத்துறை அதிகாரிகள் நடைபாதையில் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
அதன்படி அலிபிரியில் இருந்து திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்கள் வழக்கம் போல் தனியாகவோ குழுவாகவோ அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அனுமதிக்கப்படுகிறார்கள்.
அதன்பிறகு பக்தர்கள் குழுக்களாக கூட்டம் கூட்டமாக அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு குழுக்களிலும் 70 முதல் 100 பக்தர்கள் இருக்கும் படி பார்த்துக் கொள்கிறார்கள். மேலும் 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பிற்பகல் முதல் அனுமதி இல்லை.
அலிபிரி நடைபாதை இரவு 10 மணிக்கு மூடப்பட்டு வந்த நிலையில் தற்போது இரவு 9.30 மணிக்கே மூடப்படும். வனப்பகுதியையொட்டி பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் சிறுத்தைகளின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
இதனிடையே சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சித்து வருகிறார்கள். எனவே பக்தர்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருப்பதி அலிபிரி மலைபாதையில் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த 3 வயது சிறுமியை சிறுத்தை கடித்ததில் அவர் பலியானார். இரவில் மின்விளக்கு வெளிச்சத்தில் பெற்றோரை பிரிந்த சிறுமி படிக்கட்டுகளில் ஓடிக் கொண்டிருந்தாராம். அப்போது சிறுத்தை சிறுமியை தூக்கிக் கொண்டு ஓடியது. இதையடுத்து சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்ட கூண்டில் 6 சிறுத்தைகள் சிக்கின என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 6 சிறுத்தைகளில் ரத்த மாதிரி எடுத்து சோதனை செய்ததில் ஒரு பெரிய சிறுத்தைதான் குழந்தையை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுத்தையை திருப்பதி பூங்காவில் உள்ள கூண்டில் வைக்க முடிவு செய்யப்பட்டது.
அது போல் திருப்பதி மலை பாதையில் கரடியின் நடமாட்டத்தையும் பக்தர்கள் கண்டதாக புகார் அளித்துள்ளனர். இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் கூட்டமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில் தற்போது திருப்பதி தேவஸ்தானம் மலை பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு ஒரு கைத்தடி வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications