"ரூ.2000 கோடி.." 4 கண்டெய்னர்களில் கட்டுக்கட்டாக பணம்.. கடைசியில் பெரிய ட்விஸ்ட்! என்ன நடந்தது?
திருப்பதி: ஆந்திராவில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.2000 கோடி ரொக்கத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவில் சுமார் 190 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது

இன்னும் 5 கட்ட தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதற்கான பிரச்சாரத்தை அனைத்து அரசியல் தலைவர்களும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக முக்கிய அரசியல் தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திரா: நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் வரும் 13ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதன் காரணமாக ஆந்திரா முழுவதும் வாகன சோதனையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தச் சூழலில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் திடீரென 2000 கோடி ரூபாய் பணம் பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கஜனாம்பள்ளி செக்போஸ்ட் அருகே போலீசார் வழக்கம் போல வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக நான்கு கண்டெய்னர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன. அதைத் தடுத்து நிறுத்திய அதிகாரிகள் ஒரு கண்டெய்னரை திறந்து பார்த்துள்ளனர். அதில் கட்டுக்கட்டாக 500 கோடி ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.
ரொக்கம்: மொத்தம் நான்கு கண்டெய்னர்களிலும் பணமே இருந்துள்ளது. 4 கண்டெய்னர்களில் மொத்தம் 2000 கோடி ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. இவ்வளவு பெரிய அளவில் பணம் கைப்பற்றப்பட்டதால் இது தொடர்பாக உள்ளூர் போலீசார், மாவட்ட ஆட்சியர், தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு இது தொடர்பாக உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.. ஒரே நேரத்தில் எடுத்துச் செல்லப்பட்ட 2000 கோடி ரூபாய் ரொக்கம் பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரிசர்வ் வங்கி: இதையடுத்து இது தொடர்பாக நடத்தப்பட்ட உயர்மட்ட விசாரணையில் அந்த பணம் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் தெரிய வந்தது. அதாவது அந்த ரொக்கம் முழுவதும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவுக்குச் சொந்தமானது என்றும் அது கேரள மாநிலம் கொச்சியிலிருந்து ஹைதராபாத்தில் உள்ள ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கிளைக்கு எடுத்துச் செல்லப்படுவதும் தெரியவந்தது. மேலும், அதில் ரூ. 500 கோடி ஐசிஐசிஐ வங்கிக்கும், 500 கோடிகள் ஐடிபிஐ வங்கிக்கும், மேலும் ஆயிரம் கோடி ரூபாய் பெடரல் வங்கிக்கும் சொந்தமானது என்பதும் தெரிய வந்தது. இதன் பின்னரே பரபரப்பு ஓய்ந்தது.
4 கன்டெய்னர்கள்: இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "அனந்தபூர் மாவட்டத்தில் 4 கன்டெய்னர்களில் கரன்சியை சிறைபிடித்தோம். ஒவ்வொரு கன்டெய்னர்களிலும் ரூ. 500 கோடி இருப்பதைக் கண்டுபிடித்தோம். நான்கு கன்டெய்னர்களில் மொத்தம் ரூ. 2 ஆயிரம் கோடி இருந்தது. அவர்களிடம் இருந்த ஆவணங்களைச் சரிபார்த்தோம். உடனே உயர் அதிகாரிகளுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளோம்.
கொச்சி ரிசர்வ் வங்கியில் இருந்து ஹைதராபாத் ரிசர்வ் வங்கிக்கு கண்டெய்னர்களில் பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இந்த பணம் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமானது.. இது தொடர்பான முழுமையான ஆவணங்களை வைத்திருந்தார்கள். இதையடுத்து கன்டெய்னர்களை விடுவித்தோம்" என்றார்.
திருப்பூர் கன்டெய்னர்கள்: தமிழகத்திலும் இதேபோல ஒரு சம்பவம் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 2016இல் நடந்துள்ளது. அப்போது 2016 சட்டசபைத் தேர்தல் காரணமாக நடத்தை விதிகள் அமலில் இருந்தது. அந்தாண்டு மே 13ஆம் தேதி திருப்பூர் அருகே 3 கண்டெய்னர் லாரிகளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஆந்திராவுக்குக் கொண்டு செல்லப்பட்ட ரூ. 570 கோடி பிடிபட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இது தொடர்பாக முதலில் பல வித தகவல்கள் வெளியானது. அதன் பின்னர் பிடிபட்ட ரூ. 570 கோடி ஸ்டேட் வங்கிக்குச் சொந்தமானது என்று சிபிஐ தனது அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. .












Click it and Unblock the Notifications