அறிமுகமான லக்கி டிப்.. திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்களுக்கு தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை நேரத்தில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வது நடைமுறையில் இருக்கிறது. அதற்கான டோக்கன் வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை இருந்த நடைமுறைக்குப் பதிலாக 'லக்கி டிப்' (குலுக்கல்) என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் மாத அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் 20-ந்தேதி வரை 'லக்கி டிப்' பதிவு செய்ய வேண்டும் என திருப்பதி தேவஸ்தான் அறிவித்துள்ளது.
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய ஆர்வம் காட்டுவார்கள். அப்படி அங்கப்பிரதட்சணம் செய்ய வேண்டும் என்றால், அதற்கு டோக்கன் பெற வேண்டும். அதற்கான நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, ஒருமுறை அங்கப்பிரதட்சணம் செய்தவர்கள் மீண்டும் பதிவு செய்ய, முன்பிருந்த 90 நாட்களுக்குப் பதிலாக இப்போது 180 நாட்கள் இடைவெளி அவசியம் ஆகும்.

திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை நேரத்தில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது. அதற்கான டோக்கன் வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை இருந்த நடைமுறைக்குப் பதிலாக 'லக்கி டிப்' (குலுக்கல்) என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 3 மாதங்களுக்கு முன்பே ஆன்லைன் 'லக்கி டிப்' முறையால் வெளியிடப்படும். தற்போது டிசம்பர் மாத அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் 20-ந்தேதி வரை 'லக்கி டிப்' பதிவு செய்ய வேண்டும். 'லக்கி டிப்' மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கே டோக்கன்கள் ஒதுக்கப்படும். வெள்ளிக்கிழமையை தவிர தினமும் 750 டோக்கன்களும், சனிக்கிழமையில் 500 டோக்கன்களும் வழங்கப்படும்.
பக்தர்கள் மீண்டும் இந்தச் சேவையைப் பெறுவதற்கான கால இடைவெளி 90 நாட்களுக்கு பதிலாக 180 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கு பதிவு செய்ய வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் அதிகாலையில், சுப்ரபாத சேவைக்கு முன்பாக நடைபெறும் என்பதால் அப்போது தான் பங்கேற்க முடியும். அதேபோல் கலந்துகொள்ள டோக்கன் உள்ள பக்தர்கள் மட்டுமே அனுமதிப்பது நடைமுறையில் இருக்கிறது. அதேபோல் அங்கப்பிரதட்சணம் செய்ய வேண்டும் என்றால் திருப்பதிக்கு பக்தர்கள் பாரம்பரிய உடையில் (ஆண்களுக்கு வேட்டி, பெண்களுக்கு சேலை) வரவேண்டும். புஷ்கரணியில் நீராடிய பின், ஈர உடையுடன் அங்கப்பிரதட்சணம் செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications