திருப்பதி இளைஞரை கொன்று! உடலை சென்னை கூவத்தில் வீசிய பவன் கல்யாண் கட்சி பெண் நிர்வாகி கைது
திருப்பதி: ஆந்திராவில் கொலை செய்து இளைஞரின் உடலை சென்னை கூவத்தில் வீசிய ஜனசேனா கட்சி நிர்வாகிகள் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். கொலையாளிகள் எப்படி கண்டறியப்பட்டனர் என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
சென்னை ஏழுகிணறு எம்.எஸ்.நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பின்புறத்தில் கூவம் ஆற்றில் கடந்த 8ஆம் தேதி உடலில் காயங்களுடன் 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலம் இருந்தது. தகவலறிந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது இறந்தவர், திருப்பதியை அடுத்த ஸ்ரீகாளஹஸ்தியை சேர்ந்த ஸ்ரீனிவாசலு (என்கிற) ராயுடு (22) என்பது தெரியவந்தது. காரில் வந்த ஒரு கும்பல் , அவரது உடலை கூவத்தில் வீசி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து காரின் பதிவெண் வைத்து போலீஸார் துப்பு துலக்கினர். அதில் காரில் வந்து யாரோ ராயுடுவின் சடலத்தை வீசி சென்றது தெரியவந்தது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் ஐடி விங் நிர்வாகி ஸ்ரீகாளஹஸ்தியைச் சேர்ந்த சிவக்குமார் (36), ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி பெண் பொறுப்பாளர் வினுதா கோட்டா (31), அவரது கணவர் சந்திரபாபு (35), உதவியாளர் கோபி (24), கார் ஓட்டுநர் ரேணிகுண்டாவைச் சேர்ந்த ஷேக் தாசர் (23) என்பது தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் திருத்தணியில் கைது செய்த போலீஸார் சனிக்கிழமை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில் சந்திரபாபு, விழுதா ஆகியோர் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2019ஆம் ஆண்டு முதல் விழுதா கோட்டா வீட்டில்தான் ராயுடு பணியாற்றி வந்தார்.
கடந்த மார்ச் மாதம் விழுதாவின் படுக்கை அறையில் அவர் உடை மாற்றும் அறையில் கட்டிலுக்கு அடியில் ஒரு செல்போன் இருந்ததை வினுதா பார்த்தார். உடனே அந்த செல்போனை எடுத்து பார்த்த போது அது ராயுடுவினுடையது என தெரியவந்தது.
அந்த போனை பார்த்த போது அதில் வினுதா உடை மாற்றும் காட்சிகள் பதிவாகிக் கொண்டிருந்தது. இது குறித்து ராயுடுவிடம், வினுதாவின் கணவர் சந்திரபாபு விசாரித்தார். அப்போது தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த காளஹஸ்தி எம்எல்ஏ பஜாலா சுதீர் ரெட்டிக்கு, ஜனசேனாவின் ரகசியங்களையும் செயல்பாடுகளையும் அவருக்கு உளவு சொல்லி பணம் வாங்கி வந்தது தெரியவந்தது.
அவர் சொன்னதன் பேரில்தான் வினுதாவின் உடை மாற்றும் வீடியோக்களை ராயுடு எடுத்தாராம். இதையடுத்து ராயுடுவை எச்சரித்து அவரது பாட்டியுடன் அவரை அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ராயுடுவை அனுப்பி வைப்பது போல் அனுப்பி வைத்து அவரை தங்கள் வீட்டில் ஒரு அறையில் அடைத்து வைத்து வினுதாவும் சந்திரபாபுவும் விசாரித்தனராம்.
அப்போது ராயுடுவை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி கழிவறையில் ராயுடு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அச்சத்தில் அவரது உடலை காரில் எடுத்து வந்து சென்னையில் கூவம் ஆற்றில் வீசிச் சென்றதாக தெரிவித்தனர்.
மேலும் ராயுடுவை தாங்கள் கொலை செய்யவில்லை என்றும் அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்றும் தெரிவித்தனர். இதுகுறித்து ஆந்திரா போலீஸாருடன் சென்னை போலீஸார் கலந்தாலோசித்து விசாரணையில் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications