தீபாவளி ஓவர்! ஐப்பசி அமாவாசையில் திருப்பதி ஏழுமலையானை சர்வ தரிசனத்தில் தரிசிக்க எவ்வளவு நேரமானது?
திருப்பதி: திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய சர்வ தரிசனத்தில் 24 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் மொத்த தங்குமிடங்களும் நிரம்பி 3 கி.மீ. தூரம் வரை வரிசை நீண்டிருந்ததது.
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். தற்போது புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையிலும் ஏழுமலையானை ஏராளமான பக்தர்கள் தரிசிக்கிறார்கள்.

தற்போது தீபாவளி பண்டிகைக்கும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதாம். நேற்று நவம்பர் 1 ஆம் தேதி திருமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கடந்த புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர் விடுமுறை என்பதால் ஏராளமானோர் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்றைய தினம் நவம்பர் 1 ஆம் தேதி 67,785 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அது போல் 27,753 பேர் முடி காணிக்கை கொடுத்தனர். தீபாவளி நேரத்தில் விடுமுறை நாளான நவம்பர் 1 ஆம் தேதி உண்டியல் காணிக்கை 2.38 கோடி ரூபாய் ஆகும். சர்வ தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருந்தனர். அது போல் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் தங்கும் மண்டபங்கள் நிறைந்து 3 கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் காத்திருந்தனர்.
ரூ 300 சிறப்பு தரிசனத்திற்கு 3 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். நடைபாதையாக வந்த பக்தர்கள் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை தரிசனத்திற்காக காத்திருந்தனர். மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன ஷெட்யூலில் அவர்கள் 2 மணி முதல் 3 மணி நேரம் வரை காத்திருந்தனர்.
கடந்த 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை அன்று 63,987 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அன்றைய தினம் 20,902 பேர் முடி காணிக்கை செலுத்தினர். அது போல் தீபாவளி அன்று ரூ 2,66 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்தது. சர்வ தரிசனத்திற்கான டிக்கெட் இல்லாமல் தரிசனம் செய்வோருக்கு 18 மணி நேரம் ஆனது.
திருமலையில் கடுங்குளிர் நிலவுகிறது. மேலும் ஆக்ஸிஜன் அளவும் திருமலையில் குறைவாக இருப்பதால் ஆஸ்துமா நோயாளிகள், 60 வயதுக்கு மேற்பட்டோர் யாரும் நடைபாதை வழியாக திருப்பதிக்கு நடந்து வர வேண்டாம் என தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருப்பதிக்கு மாதந்தோறும் 24 ஆம் தேதி, அதாவது 3 மாதங்களுக்கு முன்பே ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் புக்கிங் தொடங்குகின்றன. அதில் ஒரு அக்கவுன்ட்டில் 6 டிக்கெட்டுகள் வரை புக்கிங் செய்யலாம். அது போல் எக்ஸ்ட்ரா லட்டு வேண்டுமானாலும் தனியே பணம் செலுத்திக் கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை ஆவணமாக கொண்டு டிக்கெட் புக் செய்ய வேண்டும். அறைகளை புக் செய்ய அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு புக்கிங் ஸ்லாட் திறக்கப்படும். அதில் புக் செய்துக் கொள்ளலாம். ரூ 300 தரிசனத்திற்கும் அறை புக்கிங்கிற்கும் ஹை ஸ்பீடு இன்டர்நெட் இருந்தால்தான் புக் செய்ய முடியும்.












Click it and Unblock the Notifications