திருப்பதியில் அமைச்சர் மகனுக்கு திருமணம்... எளிமையாக நடைபெற்ற விழா
திருப்பதி: தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் மகனுக்கு திருப்பதியில் நேற்று முன் தினம் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிள் என யாரையும் அழைக்காமல் திருமண விழாவை எளிமையாக நடத்தி முடித்துள்ளார் அமைச்சர் அன்பழகன்.
வரும் வாரத்தில் தருமபுரியில் வரவேற்பு விழா நடத்தி அதில் கட்சியினருக்கு விருந்து அளிக்க உள்ளார் அவர்.

அமைதியான மனிதர்
தமிழக அமைச்சரவையில் இருக்கும் இடம் தெரியாமல் எளிமையாக இருப்பவர் உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன். ஆண்டுதோறும் ஜூலை மாதம் நடைபெறும் அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் போது மட்டுமே அவரை ஊடகத்தில் பார்க்க முடியும். மற்ற நேரங்களில் ஊடகங்களை கண்டாலே பத்து அடி பின்னுக்கு சென்றுவிடுவார்.

கவனமுடன்
இதனிடையே மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள செல்கிற போது செய்தியாளர்களை தவிர்க்க முடியாமல் சந்தித்தால் கூட, வார்த்தைகளை கவனமுடன் கையாண்டு ஒதுங்கி கொள்வார். திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி போன்றோர் இருக்கக்கூடிய அமைச்சரவையில் இப்படியும் ஒருவர் இருக்கிறார்.

அழைப்பில்லை
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தன்னுடைய மகனுக்கு திருமணம் நடத்திய அமைச்சர் அன்பழகன், கட்சியினர் யாருக்கும் அழைப்புவிடுக்கவில்லை. முதலமைச்சருக்கு கூட அழைப்பு விடுக்காமல் எளிமையான முறையில் மிக நெருங்கிய உறவுகளை மட்டும் அழைத்து திருப்பதியில் நடத்தி முடித்துள்ளார். இது தொடர்பாக நாம் விசாரித்ததில், அவரின் தனிப்பட்ட வேண்டுதல் அது அதைத் தவிர வேறு காரணம் இருப்பதாக தெரியவில்லை என பதில் கிடைத்தது.

மணமக்களுக்கு வாழ்த்து
இந்நிலையில் தருமபுரியில் அமைச்சர் அன்பழகன் வீட்டுக்கு செல்லும் கட்சியினர் திருமணத்திற்கு அழைக்காவிடாலும் பரவாயில்லை, மணமக்களை கூப்பிடுங்கள் வாழ்த்தி விட்டு செல்கிரோம் எனக் கூறி மலர்கொத்துக்களையும், மொய்களையும் கொடுத்து செல்கின்றனர். இதனால் விரைவில் வரவேற்பு விழாவை நடத்தி அதில் தருமபுரி மாவட்ட கட்சியினருக்கு விருந்து அளிக்க உள்ளாராம் அமைச்சர்.












Click it and Unblock the Notifications