பிரதமர் பதவி பறிபோகும் அச்சம்..திருப்பதி ஏழுமலையானிடம் மகிந்த ராஜபக்சே தஞ்சம்!
திருப்பதி: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே இன்று 2 நாட்கள் பயணமாக தமது குடும்பத்தினருடன் திருப்பதி வருகை தந்துள்ளார். பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே நீக்கப்படலாம் என்கிற தகவல்கள் வலம் வரும் நிலையில் அவர் திருப்பதி வருகை தந்துள்ளார்.
இலங்கையில் அதிபராக கோத்தபாய ராஜபக்சே, பிரதமராக அவரது மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்சே பதவியில் உள்ளனர். மேலும் பசில் ராஜபக்சே, மகிந்த மகன் நாமல் ராஜபக்சே உள்ளிட்ட ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் அமைச்சர்களாக, அதிகாரமிக்க பதவிகளில் இருந்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக மகிந்த ராஜ்பக்சே, பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்படலாம்; அவருக்கு பதில் பசில் ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்படலாம் என்கின்ற தகவல்கள் வலம் வருகின்றன. இதனால் மகிந்த ராஜபக்சே கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த பின்னணியில் இன்று திடீரென 2 நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார் மகிந்த ராஜபக்சே. திருப்பதிக்கு குடும்பத்தினருடன் வருகை தந்த மகிந்த ராஜபக்சேவை ஆந்திரா துணை முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அம்மாநில குழுவினர் வரவேற்றனர்.

இன்று இரவு திருப்பதியில் தமது குடும்பத்தினருடன் மகிந்த ராஜபக்சே தங்குகிறார். பின்னர் நாளை காலை திருப்பதி கோவிலில் மகிந்த ராஜபக்சேவும் அவரது குடும்பத்தினரும் சுவாமி தரிசனம் செய்கின்றனர். மகிந்த ராஜபக்சேவின் வருகையை ஒட்டி திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications