திருப்பதியில் ஜனவரி 10ல் வைகுண்ட ஏகாதசி விழா! ஜன.19ஆம் தேதி வரை "இந்த" சேவைகள் ரத்து
திருப்பதி: திருப்பதி ஏழுலையான் கோயிலில் ஜனவரி 9-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன. திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனம் நடைபெறுவதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து பெருமாள் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்த வைபவம் எல்லா பெருமாள் கோயில்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

அதிலும் 108 திவ்ய தேசங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில் திருப்பதியில் வரும் ஜனவரி 10-ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு திருமலையில் பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிகாரிகள் பேசியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.
ஜனவரி 10 முதல் 19-ஆம் தேதி வரை 10 நாட்கள் பக்தர்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் வழங்கப்படும். வைகுண்ட ஏகாதசிக்கு இன்னும் 40 நாட்கள் மட்டுமே உள்ளதால், அந்தந்தத் துறை அலுவலர்களும் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
10 நாட்களும் வைகுண்ட துவார தரிசனம் வழியாகச் சென்று சாதாரண பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முன்னுரிமை தரப்படும். சாதாரண பக்தர்களுக்கு அதிக தரிசனத்தை வழங்க டிக்கெட் ஒதுக்கீடு மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து இன்னும் 2 வாரங்களில் மற்றொரு ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும்.
ஜனவரி 9ஆம் தேதி 19-ஆம் தேதி வரை ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. ஜனவரி 10ஆம் தேதி தங்கத் தேரோட்டம், 11 ஆம் தேதி சக்கர ஸ்நானம் நடக்கிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை 11 ஆம் நாள் வைகுண்ட ஏகாதசி என கொண்டாடப்படுகிறது. பெருமாளின் வைகுண்ட கதவுகள் அன்றைய தினம் திறக்கப்படுவதாக மக்கள் நம்புகிறார்கள். இந்த வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய நாள் கண் விழித்து சுவாமியின் துதியை பாடி அடுத்த நாள் சொர்க்க வாசல் வழியாக பெருமாளை தரிசிப்பார்கள்.
ஒரு சில கோயில்களில் இந்நாளின் முந்தைய பத்து நாட்களில் பகல் பத்து, பிந்தைய நாட்களில் இராப்பத்து என சிறப்பாக விழா நடைபெறுகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா 21 நாட்கள் நடைபெறுகிறது. ஏகாதசி நாளன்று பெருமாளுக்கு ரத்தின அங்கி அணிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications