வாட்ஸ்அப் மூலம் திருப்பதி டிக்கெட்? குறி வைத்த சைபர் மோசடி கும்பல்.. திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்!
திருப்பதி: வாட்ஸ்-அப் மூலம் தரிசன முன்பதிவு திட்டம் பரிசீலனையில் மட்டுமே உள்ளது என திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. வாட்ஸ் அப் மூலம் முன்பதிவு செய்யும் முறை குறித்து எந்தவித பணிகளும் தொடங்கப்படவில்லை என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. சைபர் குற்றவாளிகள் பக்தர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வருவதை அடுத்து திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆந்திர மாநில அரசு பொதுமக்களுக்கு சுலபமான முறையில் அரசு சேவைகளை வழங்குவதற்காக முதற்கட்டமாக 161 சேவைகளை வாட்ஸ் அப் மூலம் பெறும் திட்டத்தை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் கடந்த 30ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் +919552300009 என்ற ஆந்திர பிரதேச அரசின் அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் சேவை எண் வெளியிடப்பட்டது.

இந்த வாட்ஸ் அப் எண்ணுக்கு ஹாய் என மெசேஜ் செய்த பிறகு எந்த துறை சேவை வேண்டும் என்பதை தேர்வு செய்து அதன் பிறகு அந்தத் துறைக்கு உள்ளே சென்று அதன் சேவைகளை பெறலாம். அதன்படி வருவாய் துறை மூலம் சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், உள்ளிட்ட பல்வேறு சேவைகளும், நகராட்சி, மாநகராட்சி துறைகள் சார்பில் பிறப்பு, இறப்பு சான்றிதழ், சொத்து வரி செலுத்துவது உள்ளிட்ட சேவைகளும் ஆந்திர மாநிலத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை கோயில்களில் தரிசன டிக்கெட், அறைகள் முன்பதிவு, பிரசாதங்கள், உண்டியல் காணிக்கை செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சேவைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு விரைவில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சேவைகளும், மத்திய அரசிடம் பேசி ரயில்வே புக்கிங், ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக சேவைகளும் வாட்ஸ்அப் எண் மூலம் பெற பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்தார்.
ஆனால் அதற்குள் திருப்பதி தேவஸ்தானத்தின் அனைத்து சேவைகளும் இனி வாட்ஸ் அப்பில் பெறலாம் என்று வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதனை உண்மை என நம்பி பல பக்தர்கள் இந்த எண்ணிற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சேவைகளை பெறுவதற்காக முயற்சி செய்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, சில சைபர் கிரிமினல்கள், ஆந்திர மாநில அரசின் அரசு லோகோவை வாட்ஸ் அப்பில் பயன்படுத்தி பக்தர்களிடம் பணம் பெரும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரியவந்துள்ளது. எனவே திருமலை திருப்பதி தேவஸ்தானம், வாட்ஸ் அப்பில் தரிசன டிக்கெட் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தவித செயல்பாடுகளும் இதுவரை தொடங்கப்படவில்லை, தேவஸ்தானத்தின் சேவைகளை வாட்ஸ்அப் மூலம் இணைப்பதற்கான முதற்கட்ட பணிகள் கூட இதுவரை தொடங்கப்படவில்லை.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு மாதமும் தரிசன டிக்கெட்டுகள், அறைகள் முன்பதிவு உள்ளிட்டவை ஆன்லைனில் வெளியிடும் போது தேவஸ்தானத்தின் சர்வர் ஒரு சில நேரத்தில் முடங்கி விடுகிறது. இதனால் ஜியோ கிளவுட் மேனேஜ்மென்ட் முறையில் ஜியோ நிறுவனத்துடன் சேர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் டிக்கெட் முன்பதிவு வெளியிடுகிறது.
அவ்வாறு இருப்பினும் ஒரு லட்சம் டிக்கெட்டுகளை வெளியிட்டால் 20 லட்சம் பக்தர்கள் அதனை பெறுவதற்காக முயற்சி செய்து வருகின்றனர். இதனால் பலர் ஏமாற்றம் அடைகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் அரசின் வாட்ஸ்அப் செயலி மூலம் தேவஸ்தான டிக்கெட்டுகள் பெறுவதை நடைமுறைப்படுத்தினால் அரசு சர்வர் பாதிக்கும் நிலை ஏற்படும்.
எனவே இது குறித்து எந்தவித முயற்சியும் பணிகளும் தொடங்கப்படாத நிலையில் பக்தர்கள் இதனை நம்ப வேண்டாம். அதிகாரப்பூர்வமாக வாட்ஸ் அப் செயலி மூலம் சேவைகள் தொடங்கப்பட்டால் திருமலை திருப்பதி தேவஸ்தானமும் அல்லது ஆந்திர மாநில அரசு அதிகாரப்பூர்வமாக ஊடகத்தின் மூலம் வெளியிடும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பக்தர்கள் அலர்ட்டாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications