பிளாஸ்டிக் இல்லாத நகரமாகும் திருமலை... இன்று முதல் அமல் - ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு
திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று முதல் திருமலை கோயிலில் பூரண பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. மலை உச்சியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளது.
திருப்பதி: ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருமலையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், கேரி பேக்குகள், கவர்கள், ஷாம்பு பாட்டில்கள், ஷாம்பு பாக்கெட்டுகள் அல்லது எந்த வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்தவும் எடுத்துச் செல்லவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமலையில் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மலை மீது சிகரெட், புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்த தடை உள்ளது. தற்போது பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருமலைக்கு வரும் அனைத்து வாகனங்கள் மற்றும் தனிநபர்கள் இனி திருப்பதியில் உள்ள அலிபிரி சோதனைச் சாவடியில் முழுமையாக சோதனை செய்யப்படுவார்கள், பின்னர் அவர்கள் திருமலைக்கு நடந்தோ அல்லது வாகனத்திலோ செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருமலையில் உள்ள வியாபாரிகள் இனி பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக மக்கும் அல்லது காகித அட்டைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் அல்லாத கவர்கள் வழங்குவதற்காக பக்தர்களிடம் வியாபாரிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் இருக்க, கடைகளின் முன் கட்டண அறிவிப்பு பலகைகளை நிறுவ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹோட்டல்கள் மற்றும் கடைகளில் ஈரமான மற்றும் உலர் கழிவுகளை தனித்தனி குப்பைத் தொட்டிகளில் போட்டு எளிதில் குப்பைகளை சேகரிக்க வேண்டும்.
கடைக்காரர்கள் தாங்கள் விற்க உரிமம் பெற்ற பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் விஜிலென்ஸ், எஸ்டேட் மற்றும் சுகாதார அதிகாரிகள், கடைகள் மற்றும் ஹோட்டல்களில் சோதனை நடத்தும் பட்சத்தில் பிளாஸ்டிக் தடை விதியை மீறி அவற்றை பயன்படுத்தினால், அவற்றை பறிமுதல் செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பாட்டில்கள் விற்பனை செய்யப்படாத திருமலையில் ஏற்கனவே ஓரளவு பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கும் அதிகாரிகள், இதற்கு பக்தர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனை திருமலைக்கு வரும் பக்தர்கள் கவனத்தில் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications