70 லட்சம் கிலோ நெய்.. ஒரு பரிசோதனை கூட இல்லை! திருப்பதி லட்டு கலப்படம்.. வெளியான முக்கிய ரிப்போர்ட்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் தயாரிப்பதில் பயன்படுத்தப்பட்ட நெய் கொள்முதலில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் அமைக்கப்பட்ட ஒருநபர் குழுவின் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தினேஷ் குமார் தலைமையிலான இந்தக் குழு, முந்தைய ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆட்சிக்காலத்தில் நடந்த நிர்வாகத் தோல்விகள் மற்றும் விதிமுறை மீறல்களைத் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
உலக புகழ்பெற்ற திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகார், உலகெங்கும் உள்ள பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பான தகவல்கள் வெளியாகி, உலகெங்கும் உள்ள ஏழுமலையான் பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்து விசாரிக்க 2026 பிப்ரவரியில் அமைக்கப்பட்ட தினேஷ் குமார் குழு, தற்போது தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

திருப்பதி லட்டு
இந்த முறைகேடுகளுக்குக் கோயில் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளே முக்கியக் காரணம் என அறிக்கை குற்றச்சாட்டுகிறது.. குறிப்பாக முன்னாள் செயல் அதிகாரி ஏ.வி. தர்மரெட்டி தான் இந்தத் தவறுகளுக்கு முதன்மையான பொறுப்பாளி என அறிக்கை குறிப்பிடுகிறது. டெண்டர் விதிகளைத் தளர்த்தியது, கலப்படம் உறுதியான பின்னரும் நடவடிக்கை எடுக்கத் தவறியது போன்றவை அவர் மீதான முக்கியக் குற்றச்சாட்டுகளாகும்.
மேலும், முன்னாள் எம்.எல்.ஏக்கள் செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி, பூமனா கருணாகர் ரெட்டி (திருப்பதி தேவஸ்தான முன்னாள் தலைவர்) மற்றும் கொள்முதல் குழு உறுப்பினர்கள் பாதுகாப்பு விதிமுறைகளைத் தளர்த்தியதாக அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
70 கிலோ நெய்
கடந்த 2022 ஆகஸ்ட் 3ம் தேதி சி.எஃப்.டி.ஆர்.ஐ (CFTRI) ஆய்வகம் அளித்த அறிக்கையில், நெய்யில் தாவர எண்ணெய் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், அந்தத் தகவல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.. சப்ளையர்களும் பிளாக்லிஸ்ட் செய்யப்படவில்லை. மேலும், ஜூலை 2022 முதல் கட்டாயமாக்கப்பட்ட உணவுப் பாதுகாப்புச் சோதனைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. இதன் விளைவாக சுமார் 70 லட்சம் கிலோ நெய் முறையான பரிசோதனையின்றி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மிகக் குறைந்த விலைக்கு டெண்டர் கொடுக்கும் முறையே இந்தக் கலப்படத்திற்கு ஊக்கமளிப்பதாக அமைந்தது. அதாவது அசல் நெய்யை வழங்கவே முடியாத அளவுக்கு மிகக் குறைந்த விலையைச் சில நிறுவனங்கள் குறிப்பிட்டதும், அதனை நிர்வாகம் ஏற்றுக் கொண்டதும் விதிமீறல் என அறிக்கை கூறுகிறது. இந்தளவுக்கு குறைந்த விலையில் நெய்யை தர முடியாது என்பதை கவனிக்க அல்லது கவனித்தும் அதை தடுத்து நிறுத்த அதிகாரிகள் தவறிவிட்டதும் முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை
தவறிழைத்த அதிகாரிகள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்... கலப்பட நெய் வழங்கிய அனைத்து நிறுவனங்களையும் உடனடியாகக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஆய்வக முடிவுகள் வருவதற்கு முன்பே நெய்யைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க, கோயிலிலேயே நவீனப் பரிசோதனை மையங்களை உருவாக்க வேண்டும். குறைந்தபட்ச விலை என்ற முறையை மாற்றி, தரத்தின் அடிப்படையில் நெய்யை கொள்முதல் செய்யும் முறையைக் கொண்டு வர வேண்டும்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மறுப்பு
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. ஆந்திர முதல்வர் தனது தோல்விகளை மறைக்கத் திட்டமிட்டே எதிர்க்கட்சியினர் மீது பழி சுமத்துவதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜி. ஸ்ரீகாந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், முன்பு விலங்கு கொழுப்பு இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டி இருந்த நிலையில், அது இல்லை என தெரிவிந்துவிட்டால் பொய்யை மூடி மறைக்கவே இதுபோல எல்லாம் செய்வதாகவும் அவர் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications