திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகம்.. 3 இடங்களில் மட்டுமே கிடைக்கும்!
திருப்பதி: திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. நாளொன்றுக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் வரை விநியோகம் செய்யப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆகியவை ஆன்லைன் மூலம் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. ஒவ்வொரு மாதமும் ஏழுமலையானை வழிபட ஆன்லைனில் வெளியிடப்படும் டிக்கெட்டுகள் 10 நிமிடங்களில் முன்பதிவு செய்யப்பட்டுவிடும்.
இதனால் இணையதள சேவையை பயன்படுத்தத் தெரியாதவர்கள், இணையதள வசதி வேகத்தில் குறைவாக இருக்கும் பகுதியினர் ஆன்லைன் டிக்கெட்டுகளை பயன்படுத்திக் கொள்ள முன் பதிவு செய்ய இயலாத நிலை இருந்தது.

30 ஆயிரம்
இதனால் நாளொன்றுக்கு 25 ஆயிரம் பேர் முதல் 30 ஆயிரம் பேர் வரை மட்டுமே திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகிறார்கள். ஆன்லைனில் புக் செய்யப்படுவதால் சொந்த ஊர்களில் இருந்து நேராக மேல் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் தரிசனத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பி விடுகிறார்கள்.

கார்
பெரும்பாலும் திருமலையை சுற்றியுள்ள இடங்களை மக்கள் வேன், கார் மூலம் வாடகைக்கு அமர்த்தி கொண்டு சுற்றி பார்ப்பர். ஆனால் ஆன்லைன் டிக்கெட் மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதால் வாடகை கார், ஜீப், வேன் ஓட்டுநர்களின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும் கீழ் திருப்பதியிலும் இந்த தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.

திருப்பதி
இந்த நிலையில் நாளை முதல் ஏழுமலையானை வழிபடும் வகையில் இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகின்றன. இன்று காலை 9 மணி முதல் நாளொன்றுக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது. திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசம் விருந்தினர் மாளிகை வளாகம், கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

2 டோஸ் தடுப்பூசி
டிக்கெட்டுகளை வாங்கும் பக்தர்கள் அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தில் ஏழுமலையானை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஆனால் பக்தர்கள் கண்டிப்பாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது 48 மணி நேரத்திற்கு முன் நடத்தப்பட்ட பரிசோதனையில் கிடைக்கப் பெற்ற கொரோனா நெகட்டிவ் சான்றிதழை உடன் கொண்டு வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications