வைகுண்ட ஏகாதசிக்கு திருப்பதி போறீங்களா.. திருமலை தேவஸ்தானம் பக்தர்களுக்காக எடுத்த அதிரடி முடிவு
திருப்பதி: திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று திருமலை தேவஸ்தானத்தின் அவசர அறக்கட்டளை வாரியக் கூட்டம் திருமலை தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால், அறங்காவலர் குழுத்தலைவர் பி.ஆர்.நாயுடு ஆகியோர் தலைமையில் நடந்தது. இந்த அவசர கூட்டத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இது மார்கழி மாதத்தில் வரும். வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகிறார்கள். இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வார்கள். விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்கு திசையில் என்றும் மூடப்பட்டிருந்து, இன்று மட்டுமே திறக்கும் "சொர்க்க வாசல்" என்றழைக்கப்படும் வாயில் வழியே சென்று இறைவனை வழிபடுவார்கள்.

இந்த வைகுண்ட ஏகாதசி பண்டிகை இந்த ஆண்டு டிசம்பர், 30ம் தேதி நடைபெற உள்ளது. திருமலையிலும் அன்றைய தினம் தான் பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது. அன்று முதல் ஜனவரி, 8ம் தேதி வரையிலான, 10 நாட்களும், ஏழுமலையானை தரிசிப்பவர்கள், பரமபத வாசல் வழியாக செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை திருப்பதியில் சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது.
திருப்பதி திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று திருமலை தேவஸ்தானத்தின் அவசர அறக்கட்டளை வாரியக் கூட்டம் திருமலை தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால், அறங்காவலர் குழுத்தலைவர் பி.ஆர்.நாயுடு ஆகியோர் தலைமையில் நடந்தது. இதில் வாரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு எடுக்கப்பட்ட திருப்பதியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை பார்ப்போம்:
டிசம்பர் 30-ந்தேதி ஜனவரி மாதம் 8-ந்தேதி 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் வழங்கப்படும். முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அறிவுறுத்தலின்படி, இந்த 10 நாட்களும் சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வைகுண்ட துவார தரிசனத்தின் 182 மணி நேரங்களில், இந்த 10 நாட்களில் 164 மணி நேரங்களுக்கு மேல் சாதாரண பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் ஒரு பகுதியாக, டிசம்பர் மாதம் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை, ஒவ்வொரு நாளும் ரூ.15 ஆயிரம் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் ரூ.1,000 ஸ்ரீவதி தரிசன டிக்கெட்டுகள் வழக்கமான நடைமுறையின்படி ஆன்லைனில் வழங்கப்படும்.
நவம்பர் 27-ந்தேதி முதல் டிசம்பர் 1-ந்தேதி வரை பக்தர்களுக்கு தரிசன டோக்கன்களை பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். டிசம்பர் 2-ந் தேதி இ-டிப் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். அனைவருக்கும் வெளிப்படையான முறையில் சம வாய்ப்பு வழங்குவதற்காக, டோக்கன்கள் வழங்கும் பணி திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் தேவஸ்தான மொபைல் செயலி, வாட்ஸ்அப் மூலம் மேற்கொள்ளப்படும்.
அதேநேரம் திருப்பதி மற்றும் திருமலை உள்ளூர்வாசிகளுக்கு ஜனவரி 6, 7, 8 ஆகிய தேதிகளில் ஆன்லைனில் முன்கூட்டியே முன்பதிவு செய்பவர்களுக்கு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 5 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, டிக்கெட் கவுன்டர்களில் டோக்கன் பெற கூட்டம் அலைமோதியதில் நெரிசல் ஏற்பட்டு ஆறு பக்தர்கள் உயிரிழந்தனர். எனவே இந்த முறை ஜனவரி, 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை தினமும் தலா, 15,000 பேருக்கு, 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள், ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் தினமும் தலா 1,000 பேருக்கும் ஆன்லைனில் வழங்கப்படும் என்றும் தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications