ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை.. திருப்பூர் அருகே கொடூரம்! கொலைக்கான காரணம் இதுவா?
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 பெண்கள் உட்பட 4 பேர் அரிவாளால் வெட்டி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர்களது குடும்பத்தினர், மர்மமான முறையில் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டதில் மோகன், புஷ்பவதி மற்றும் ரத்தினாம்பாள் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

உடனடியாக தகவல் அறிந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்த செந்தில்குமார் மற்றும் மற்றொருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே, உயிரிழந்த மற்ற மூவரின் உடல்களை எடுக்க விடாமல் ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளியை கைது செய்த பிறகு தான் மற்ற மூவரின் உடல்களையும் எடுக்க விடுவோம் எனக் கூறி உறவினர்களும், ஊர் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சடலங்களை மீட்டு, உடற்கூராய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலைக்கான காரணம் என்ன? ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரையும் வெட்டிக் கொன்றது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் அருகில் மது அருந்தியவரை தட்டிக் கேட்டதால் இந்த கொலை நடந்ததாக கூறப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications