அவினாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார்- லாரி பயங்கர மோதல்.. 5 மாணவர்கள் உள்பட 6 பேர் பலி
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பழங்கரை தேசிய நெடுஞ்சாலையில் கார்- லாரி பயங்கரமாக மோதிய விபத்தில் 5 கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை சேலத்திலிருந்து அவினாசிக்கு சிமெண்ட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. அப்போது அவிநாசி அருகே பழங்கரை தேசிய நெடுஞ்சாலையில் சேலத்திலிருந்து ஊட்டிக்கு சுற்றுலா சென்ற சேலம் விநாயகா பாராமெடிக்கல் கல்லூரி மாணவர்களின் டவேரா கார் லாரியின் பின்னால் வேகமாக வந்து திடீரென பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல் நொருங்கியது. இதில் காரில் பயணம் செய்த 5 மாணவர்கள் மற்றும் கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள்.
இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் உயிருக்கு போராடியவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிக்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதேபோல் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.