திருப்பூரில் அவலம்.. சாலை வசதி இல்லாததால்.. மருத்துவமனைக்கு தொட்டிலில் தூக்கி செல்லப்பட்ட கர்ப்பிணி
திருப்பூர் : திருப்பூர் அருகேயுள்ள மலைக்கிராமத்தில், சாலைவசதிகள் இல்லாததால், கரடு முரடான மலைப்பாதையில் தொட்டில் கட்டி கர்ப்பிணியை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் அவல நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
Recommended Video
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது குழிப்பட்டி செட்டில்மெண்ட் பகுதி. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால், இங்கு சரியான சாலை வசதி, மின்சார வசதி மற்றும் மருத்துவ வசதிகள் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இங்கு வசிக்கும் மக்களுக்கு மருத்துவ தேவைகளுக்காக உடுமலை அரசு மருத்துவமனையை மட்டும் நம்பி உள்ளதால், பல நேரங்களில் நோயாளிகளை தொட்டில் கட்டி, யானை சிறுத்தை கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கும் அடர்ந்த வனப்பகுதி வழியாகவே தூக்கி வர வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. மேலும் சாலை வசதிகள் இருந்தாலும் உடுமலைக்கோ அல்லது வால்பாறைக்கோ செல்ல வேண்டும் எனில் சுமார் 70 கிலோமீட்டர் தொலைவு கரடுமுரடான சாலையில் பயணித்தே செல்ல வேண்டும் என்ற இக்கட்டான சூழலும் நிலவுகிறது. தங்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தாருங்கள் என்று அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதிலும் இதே நிலையே தொடர்கிறது.
இந்நிலையில், குழிப்பட்டி செட்டில்மெண்டை சேர்ந்த விஜயன் என்பவரின் 4 மாத கர்ப்பிணி மனைவிக்கு திடீரென வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றால் குழிப்பட்டியில் இருந்து கீழே பொன்னாலம்மன் சோலை வரை பல ஆயிரம் அடி மலைப்பகுதியில் அழைத்து செல்ல வேண்டிய இக்கட்டான சூழல் உள்ளது. சாலை வசதியோ வாகன வசதியோ இல்லாத நிலையில், அப்பகுதி வாலிபர்கள் அந்த கர்ப்பிணிப் பெண்ணை, தொட்டில் கட்டி கரடு முரடான மலைப்பாதையில் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது. மலைவாழ் மக்களின் நலன் கருதி, குழிப்பட்டி செட்டில்மெண்ட் பகுதியில் சாலை வசதி அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இனியாவது இந்த அவல நிலையை தமிழக அரசு கண்டு கொள்ளுமா? சாலை வசதி அமைத்து தருமா? என்பதுதான் மலைவாழ் மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. குழிப்பட்டி செட்டில்மெண்ட் மலைவாழ் மக்களின் கனவு நனவாகுமா?