திருப்பூரில் பட்டப்பகலில் பகீர் கொலை.. கொலைக்கான காரணத்தை துண்டு பிரசுரமாக கொடுத்த கொடூரன்!
திருப்பூரில் பட்டப்பகலில் ஜோசியர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் பட்டப்பகலில் ஜோசியர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரின் குமரன் ரோடு அருகே இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. இன்று காலை 11 மணி அளவில் இந்த கொலை நடந்துள்ளதாக தெரிகிறது.
இந்த கொலை குறித்து திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
யார் கொலை
கொல்லப்பட்ட நபர் பெயர் ரமேஷ் (எ) குமார். இவர் கிளி ஜோசியராக வேலை பார்த்து வந்துள்ளார். இன்று மதியம் குமரன் ரோட்டில் இவர் சென்று கொண்டு இருந்த போது வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கொலைகாரன் யார்
இவரை கொன்றது யார் என்று தெரியவில்லை. கொலை செய்த நபர் ஹெல்மெட் அணிந்து இருந்தான். போலீசார் இவனை தீவிரமாக தேடி வருகிறார்கள். ஜோசியர் ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்.
என்ன காரணம்
கொலை செய்த பின் கொலைகாரன் மக்களை நோக்கி ''இவன் பெண்களை ஏமாற்றினான். அதனால்தான் கொன்றேன்'' என்று கூறியுள்ளான். அதேபோல் இந்த ஜோசியர் ரமேஷ், பல பெண்களை ஏமாற்றி இருக்கிறான் என்றும் துண்டு பிரசுரங்களை மக்களிடம் அந்த கொலைகாரன் வழங்கியுள்ளான்.
வீடியோவாக வந்தது
இந்த கொலை சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. கொலைகாரன் ரமேஷை கொன்றுவிட்டு, பின் பைக்கில் ஏறி தப்பித்துள்ளான். மக்கள் கொலையை வேடிக்கை பார்க்கும் நிகழ்வும் இதில் பதிவாகி உள்ளது.